Breaking News

ஜாதி சின்னம் அணிந்து வரும் மாணவர்கள் மீது நடவடிக்கை


ஜாதிசின்னங்களை அணிந்துவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என நெல்லை கலெக்டர் எச்சரித்தார். நெல்லை, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடையே ஜாதிய மோதல்கள் ஏற்படுகின்றன.
மாணவர்கள் ஜாதி தலைவர்களின் படத்துடன் உடையணிவது, கைகளில் பச்சைகுத்திக்கொள்வது, ஜாதிசங்க கொடிகளின் வண்ணங்களில் ரிப்பன் அணிந்துவருவது, திருநீறு, பொட்டு வைப்பதில் கூட ஜாதிகளை வெளிப்படுத்தும் விதங்களில் நடந்துகொள்கிறார்கள்.
இதனை தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். போலீஸ் உதவிகமிஷனர் மாதவன் பேசுகையில்; நெல்லையில் ஜாதி என்னும் களையினால் மாணவர்கள் என்னும் பயிர்கள் பாதிக்கப்படுகின்றனர். நெல்லையில் கடந்த 6 மாதங்களில் 65 மாணவர்கள் மீது வழக்குபோட்டிருக்கிறேன். எனக்கே இது வருத்தத்தை தரும் விஷயம். எனவே மாணவர்கள் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்றார். கலெக்டர் கருணாகரன் பேசுகையில், ஜாதிய அடையாளங்களை அணிந்துவரும் மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் முதலில் ஆலோசனை வழங்கி திருத்த முயற்சிக்கலாம். இல்லையெனில் அவர்கள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.