Breaking News

தேர்வு மைய துறை அலுவலர் நியமன பிரச்னை; 5 ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு "நோட்டீஸ்'


தேர்வு மைய துறை அலுவலர் பணி நியமன பிரச்னையில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பிரச்னை செய்து தர்ணாவில் ஈடுபட்டதால், ஐந்து ஆசிரியர்கள் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக, முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வு, கடந்த, ஜனவரி, 10ம் தேதி நடந்தது. முன்னதாக, தேர்வு மையங்களில் பணியாற்றுவதற்காக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க, கடந்த, ஜனவரி, 6ம் தேதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் கூட்டம் நடந்தது. இதில், முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து தகவல் பெறப்பட்ட, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர். முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர் பணிக்கு, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 30 பேர் நியமிக்கப்பட்டனர். அதேபோல், துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலர் பணிக்கு, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 30 பேர் நியமிக்கப்பட்டனர்.மேலும், அறை கண்காணிப்பாளர் பணிக்கு, 439 முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலராக நியமிக்கப்பட்ட, 30 உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அனுபவம் குறைந்தவர்கள் மற்றும் பயிற்சி அற்றவர்கள் எனக்கூறி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், அவர்களுக்கு கீழ் பணியாற்ற மறுத்தனர்.

இதையடுத்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், சி.இ.ஓ., அலுவலகம் முன்பாக, திடீர் தர்ணா செய்தனர். தேர்வுப்பணியில் ஆசிரியருக்குள் "ஈகோ' பிரச்னை ஏற்பட்டதால், முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் தலையிட்டு, மாற்று ஏற்பாடு செய்து, தேர்வை நடத்தி முடித்தார்.இந்நிலையில், அனுமதியின்றி தர்ணாவில் ஈடுபட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட ஐந்து ஆசிரியர்கள் மீது, நிர்வாக ரீதியாக விளக்கம் கேட்டு, முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.