Breaking News

அனைத்து வசதிகள் செய்து கொடுத்தும் அரசு பள்ளிகளில் கல்வித் தரம் குறைய என்னதான் காரணம்?

அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆரம்ப கல்வியாக இருந்து வருகிறது. ஒருகாலத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் ஆரம்பப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளிகள் இருந்தன. இன்றைக்கு பள்ளிகள் இல்லாத குக்கிராமங்களே இல்லை என்ற நிலை உள்ளது. ஒரு சில ஆசிரியர்கள் ஏதோ கடமைக்காக வேலைக்கு வந்தோம். மாதம் பிறந்தால் சம்பளம் பெற்றுக் கொள்கிறோம் என்ற நினைப்புடன் தான் வேலைக்கு வருகின்றனர். அரசு கட்டாயக்கல்வி திட்டம் கொண்டு வந்தும், ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளித்தும், தரமான மாணவர்களை உருவாக்குவதில் அக்கறை காட்டுவதில்லை.

ஒருவன் எந்த ஒரு உயரிய பதவியை அடைந்திருந்தாலும் அவன் கண்முன் முதலில் தெரிவது ஆரம்ப கல்வியை போதித்த ஆசிரியர் தான். ஆனால் இன்றைக்கு அரசுப்பள்ளிகளில் கல்வி என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கு காரணம் சில பள்ளிகளில் மாணவர்களுக்கேற்ற ஆசிரியர்கள் இல்லை.
அப்படி இருந்தாலும் அவர்கள் பள்ளிக்கு வந்து பாடம் கற்பிக்காமல் தங்களது சொந்தவேலைகளை தான் கவனிக்கின்றனர். சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை விட ஆசிரியர்கள் எண்ணிக்கை தான் அதிகம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாறுதல் உண்டு என்ற நிலை இருந்தும், இன்றைக்கு பலர் ஒரே பகுதியில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதோடு தங்கள் ஆதிக்கத்தையும் செலுத்தி வருகின்றனர்.

பெரும்பாலன ஆசிரியர்கள் காலத்தேடு பள்ளிக்கு வருவதில்லை. ஒரு சில ஆசிரியர்கள் பினாமியாக சிலரை நியமித்து பாடம் நடத்திய சம்பவமும் பல இடங்களில் நடந்துள்ளது.
கல்வி போதிக்க வேண்டிய ஆசிரியர்களில் ஒரு சிலரின் வேண்டப்படாத செயல்கள்,கல்விப் பணியை தவிர்த்து சொந்தப் பணிகள் மற்றும் சங்கப் பணிகளில் ஈடுபடுகின்றன.புனிதமான ஆசிரியர் தொழிலை கடமைக்கென செய்கின்றனர்ஆசிரியர்களின் இதுபோன்ற செயல்களுக்கு சில சங்கங்களும் அவர்களை கண்டிக்காமலும், அறிவுரைகள் வழங்காமலும் அவர்களின் செயல்களுக்கு உடன்பட்டு அவர்களை காப்பாற்றும் நடவடிக்கையிலே ஈடுபடுகின்றனர்.
ஆசிரியர் பணி அறப்பணி. அதற்கு உன்னை அர்ப்பணி என்பார்கள். இன்றைக்கு ஆசிரியர்கள் பணியில் தங்களை அர்ப்பணித்துக்கொள்வது என்பது அரிதாக உள்ளது. ஆரம்ப கல்வி முதல் நடுநிலைக்கல்வி வரை 1முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை அமலில் உள்ளதால் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லையெனறாலும் தேர்ச்சி என்ற நிலை அவர்களின் கல்வியை சீரழிக்கிறது.  தண்டிக்கவும்,கண்டிக்கவும் தடையுள்ளதால் மாணவர்களிடம் ஆசிரியர் மேலுள்ள பயமும் மரியாதையும் போய்விட்டது.ஆரம்ப கல்வி, நடுநிலைக்கல்வியில் முழுமையாக கட்டாய தேர்ச்சி பெற்று விடுவதால் அவர்கள் உயர்கல்வி யிலும், மேல்நிலைக்கல்வியிலும் களிமண்ணாக வந்த மாணவர்களை சிற்பமாக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் அரசு நடத்தும் தேர்வான 10ம்வகுப்பு, 12ம் வகுப்பு வகுப்பிலும் தேர்ச்சி சதவிகிதம் அரசுப்பள்ளிகளில் சரிபாதியாக குறைவதோடு அவர்களின் ஒழுக்க நடவடிக்கையும் பின்னுக்கு தள்ளப்படுகிறது.
ஆனால் உயர்நிலைக்கல்வியிலும், மேல்நிலைக்கல்வியிலும் தேர்ச்சி சதவிகிதம் குறைந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும், தலைமையாசிரியர் மீதும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை ஆரம்ப கல்வியிலும்காட்டப்பட்டால் ஆரம்ப கல்வி நன்றாக இருக்கும். ஆரம்ப பள்ளியில் இருந்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் முழுதேர்ச்சி சதவிகிதமும் அதிகரிப்பதோடு மாணவர்களும் நல்வழிப்படுத்தப்படுவார்கள். ஒழுக்கத்தையும், ஆரம்ப கல்வியை கற்கும் வயதில் அதனை கற்காததால் அவர்கள் மேல்நிலைக்கல்வியில் திணறுவதோடு அவர்கள் பணிக்கு செல்லும் வரை பாதிப்பு ஏற்படுகிறது.

பொதுவாக ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு ஒரு மனிதனுக்கு ஆரம்ப கல்வி முக்கியம். அதனை முறையாக கற்கவில்லை என்றால் அவர்கள் மேல்நிலை படிப்பு பாதிக்கப்படுவதுடன் சமூகவிரோதிகளாக கூட மாற வாய்ப்புள்ளது. ஆரம்ப கல்வியை ஒழுங்கு படுத்தினால் மட்டுமே உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் இடைநிற்றல், போதிய கல்வி அறிவு, ஒழுக்கம், முழுமையாக தேர்ச்சி இலக்கை அடைய முடியும்.