Breaking News

பள்ளியில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை முற்றிலும் தடைசெய்ய ஆலோசனை


பள்ளியில், ஆசிரியர்கள் மொபைல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்வது குறித்து, கல்வித்துறையினர் ஆலோசித்து வருகின்றனர். மொபைல்போன் பயன்பாடு, பள்ளிகளில் பலவிதமான ஒழுக்கக்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. வாட்ஸ்-அப் வழியாக கணித வினாத்தாள் அனுப்பிய விவகாரம், கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


பள்ளி மாணவருடன் பெண் ஆசிரியை ஓட்டம், மாணவியரிடம் தகாத முறையில் ஆசிரியர் நடந்து கொள்வது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால், கல்வித்துறைக்கு களங்கம் ஏற்படுவதுடன், பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரும், நெருக்கடியான மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக, சில புதிய விதிமுறைகளை பின்பற்ற, கல்வித்துறை தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் கல்வி நிபுணர்களிடம் ஆலோசனை நடந்து வருகிறது.

வரும் கல்வியாண்டில் இருந்து பள்ளிகளில் ஆசிரியர்கள் மொபைல்போன் பயன்படுத்த முற்றிலும் தடை விதிப்பது; பள்ளிக்கு மொபைல்போன் எடுத்துச் சென்றாலும், தலைமை ஆசிரியர் அறையிலோ அல்லது, அலுவலகத்திலோ வைத்துவிட்டுச் செல்ல வேண்டும்.

மாணவ, மாணவியர் பள்ளிக்கு மொபைல்போன் கொண்டு வர தடை விதிப்பது; வக்கீல்கள் அணிவதுபோல், பெண் ஆசிரியைகள் கோட் அணிவது, இளவயது ஆண் ஆசிரியர்கள், ஜீன்ஸ் பேன்ட் மற்றும் இறுக்கமான சட்டை அணிவதை தவிர்ப்பது உள்ளிட்ட சில முக்கிய விதிமுறைகள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சில இடங்களில் ஆசிரியர் - மாணவர் இடையே ஏற்படும் தவறான நட்பால், கல்வித்துறைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, சில ஆலோசனை முன்வைக்கப்பட்டு, பரிசீலனையில் உள்ளது. கல்வித்துறை அங்கீகாரத்துக்கு பிறகு, இவ்விதிமுறைகள் நடைமுறைக்கு வரும்" என்றார்.