Breaking News

தமிழகத்தில் ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு...


அரசு ஓய்வு பெற்ற ஊழியர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்வது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ஓய்வூதியர்கள் மார்ச் மாதம் முதல் பிப்ரவரி மாதம் முடிய ஒரு 
நிதியாண்டில் பெறும் மொத்த ஓய்வூதியத்தின் மீது கணக்கிடப்படும் வருமான வரியினை, ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் / கருவூல அலுவலரால் அவர்தம் மாதந்திர ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.
ஓய்வூதியர்கள் வருமான வரி சட்டம் 1961-ன் அத்தியாயம் VI-A ன் கீழ் தகுதியுள்ள கழித்தல்களுக்கான (eligible deductions)விவரங்களை ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் / கருவூல அலுவலருக்கு தெரிவிக்கும்பட்சத்தில், அவர்தம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஓய்வூதியர்கள் தாங்கள் பெறும் மொத்த ஓய்வூதியம், முதலீடுகள் மற்றும் பிடித்தம் செய்யப்பட வேண்டிய விவரங்களை வருட ஆரம்பத்திலேயே தெரிவிப்பதற்கு ஏதுவாக கருவூலக் கணக்குத் துறை ஒரு படிவத்தை வடிவமைத்துள்ளது. இப்படிவத்தை www.tn.gov.in/karuvoolam/ இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் / கருவூலத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடர்பாக, ஓய்வூதியர்கள் தாங்கள் பெறும் மொத்த ஓய்வூதிய விபரம், பிடித்தங்கள், வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் நிகர ஓய்வூதியம் போன்ற விவரங்களைwww.tn.gov.in/karuvoolam இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், தேவையான விவரங்களை ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் / கருவூல அலுவலரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
வருமான வரி பிடித்தத்திற்கு உட்படும் ஓய்வூதியர்கள் தங்களது நிரந்தர கணக்கு எண்ணை (PAN ) ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் / கருவூல அலுவலருக்கு கட்டாயமாக தெரிவிக்க வேண்டும்.
வருமான வரி சட்டம் 1961 அத்தியாயம் VI-A ன்படி கழித்தலுக்கு தகுதியான முதலீடுகளுக்குரிய சான்று நகல்களை ஓய்வூதியர்கள் (வருமான வரி கணக்கீடுதாரர்கள்) ஜனவரி மாதத்தில் ஓய்வூதியம் வழங்கும்அலுவலர் / கருவூல அலுவலரிடம் அளித்தால், அவற்றை rரிபார்த்து உரிய வரியை மட்டும் பிடித்தம் செய்ய ஏதுவாக இருக்கும். உரிய ஆவணங்களை முன் கூட்டியே (ஜனவரி மாதத்திற்குள்) அளிக்கத் தவறினால், ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் / கருவூல அலுவலர் தங்களிடமுள்ள ஆவணங்களின் அடிப்படையில் வரி பிடித்தம் செய்ய நேரிடும்.
கூடுதல் வரி பிடித்தம் செய்யப்பட்டால், அது ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் / கருவூல அலுவலரால் திருப்பி வழங்கப்பட இயலாது.
வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் போது வருமான வரி துறையிடமிருந்து மட்டுமே மிகையாக செலுத்தப்பட்ட வருமான வரியினை மீள பெற இயலும். வருமான வரி கழித்தலுக்கு தகுதியுள்ள முதலீடுகள் ஏதுமில்லையெனில், ஓய்வூதியர் எந்த விவரமும் அளிக்க தேவையில்லை. அத்தகைய நிகழ்வுகளில் அலுவலகத்தில் இருக்கக்கூடிய ஆவணங்களின்படி வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.