Breaking News

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து போன்றவைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் ஏப்., 28ல் பார்லிமென்ட் முற்றுகை போராட்டம்.

தொழிலாளர் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது,'' என மதுரையில் நேற்று துவங்கிய எச்.எம்.எஸ்., 33வது தேசிய
மாநாட்டில் பொதுச் செயலாளர் ஹர்பஜன்சிங் சித்து தெரிவித்தார்.செயலாளர் ராஜா ஸ்ரீதர் வரவேற்றார். மாநாடு மலரை வெளியிட்டு ஹர்பஜன்சிங் சித்து பேசியதாவது:
ஆட்சிக்கு வந்தால் அடிதட்டு மக்களுக்கு அரணாக இருப்போம். தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம் என பா.ஜ., வாக்குறுதியளித்தது. இதை நம்பி பா.ஜ.,விற்கு மக்கள் ஆதரவளித்தனர்.ஆட்சிக்கு வந்த பிறகு அதற்கு நேர்மாறாக பா.ஜ., அரசு செயல்படுகிறது. இந்த ஆட்சியில் 44 தொழிலாளர் விரோத சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதுகுறித்து மத்திய தொழிற்சங்கங்களை அழைத்து பேசவில்லை. இந்நிலை தொடர்ந்தால்அனைத்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராட்டங்கள் நடத்தப்படும். புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து போன்றவைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் ஏப்., 28ல் பார்லிமென்ட் முற்றுகை போராட்டம் நடக்கிறது என்றார்.ஐ.டி.யூ.சி., பொதுச் செயலாளர் சுசுகி, ''தொழிலாளர் பிரச்னைக்காக இந்தியாவிலுள்ள தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட முன்வந்து உள்ளது பாராட்டுக்குரியது. இதற்கு ஐ.டி.யூ.சி., ஆதரவு தெரிவிக்கிறது,'' என்றார்.துணை பொதுச் செயலாளர் ஜாப் வியனென், ''சமீபகாலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதை எதிர்த்து பெண்கள் போராட வேண்டும்.அதற்கான உரிமை அவர்களுக்குள்ளது,'' என்றார்.சி.ஐ.டி.யூ., தேசிய செயலாளர் சுகுமாரன்,''தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தும் முயற்சியில் பா.ஜ., அரசு ஈடுபட்டுள்ளது,'' என்றார்.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரஜீந்தர் சச்சார், சர்வதேச தொழிலாளர்ஆணைய இயக்குனர் பானுடா பூன்பாலா, ஐ.என்.டி.யூ.சி., தலைவர் சஞ்சீவரெட்டி, ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தேசிய பொது செயலாளர் சிவ்கோபால் மிஸ்ரா, எச்.எம்.எஸ்., தேசிய துணை தலைவர் தம்பான் தாமஸ், மலேசியன் தொழிலாளர் காங்., துணை பொது செயலாளர் பாலசுப்பிரமணியன், நேபாள தொழிலாளர் காங்., தலைவர் லட்சுமணன் பகதுார் பஸ்னட் மற்றும் பலர் பேசினர். செயல் தலைவர் சுப்பிரமணியன்நன்றி கூறினார்.முன்னதாக தேசிய செயலாளர் சம்பாவர்மா தலைமை வகிக்க, செயலாளர் ரேணுகா லட்சுமி முன்னிலை வகிக்க தேசிய பெண்கள் மாநாடு நடந்தது. இன்றும், நாளையும் (ஏப்.,18, 19) பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. மாநாடு ஏற்பாடுகளை வரவேற்பு குழு நிர்வாகிகள் ரபீக், ராமசுப்பு, ராம்குமார், சுப்புராம் உட்பட பலர் செய்தனர்.