Breaking News

பள்ளிக்கூடம் திறக்கும் நாளான ஜூன் 1–ந்தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்கும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பேட்டி


சென்னை,பள்ளிக்கூடம் ஜூன் மாதம் 1–ந்தேதி திறக்கப்படுகிறது. அன்றே மாணவர்களுக்கு விலை இல்லாபாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் கிடைக்கும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
மாணவர்களுக்கு பாடப்புத்தகம் கிடைக்கும்
2015–2015ம் கல்வி ஆண்டில் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஜூன் மாதம் 1–ந்தேதி திறக்கின்றன. பள்ளிக்கூடம் திறக்கும் முன்பே அவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
ஏற்கனவே பள்ளிக்கூடம் திறந்த அன்றுதான் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வந்தன. வருகிற கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 படிக்கப்போகும் மாணவர்களுக்கு முன்கூட்டியே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு வழங்கும் விலை இல்லாத 14 வித பொருட்களும் மாணவர்களுக்கு தேவைப்படும்போது உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல வருகிற கல்வி ஆண்டிலும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு த.சபீதா தெரிவித்தார்.
போலி சான்றிதழ்
2012–ம் ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு மூப்புஅடிப்படையில் பட்டதாரிஆசிரியர்கள் நியமனத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. அப்போது தரணிகோட்ட ஸ்ரீவித்யா என்பவர் போலியாக சாதி சான்று கொடுத்து பணியில் சேர்ந்துள்ளார். ஆனால் அவர் இன்றுவரை ஆசிரியர் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
அவரது பணி ரத்தாகுமா? என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதாவிடம் கேட்கப்பட்டது. உடனே அருகில் இருந்த பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பனை அழைத்து இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுங்கள் என்றார்.
அமைச்சர் தலைமையில் கூட்டம்
முன்னதாக சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மாநாட்டு வளாகத்தில் 2011–2012 ம்ஆண்டு முதல் 2014–2015 ம் ஆண்டுவரை பள்ளிக்கல்வித்துறை அறிவித்த அறிவிப்புகள் மற்றும் அந்த அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா, கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபுநய்யர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், பள்ளிக்கல்விதுறை துணை செயலாளர் சுபோத் குமார், பள்ளிக்கல்வி துறை இயக்குனர்கள் க.அறிவொளி, ரெ.இளங்கோவன், பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், தண்.வசுந்தராதேவி, வி.சி.ராமேஸ்வர முருகன், பிச்சை மற்றும் இணை இயக்குனர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.