Breaking News

அனைத்து சத்துணவு மையங்களுக்கும் டிசம்பருக்குள் 'காஸ்' இணைப்பு


தமிழகத்தில் அனைத்து சத்துணவு மையங்களும் டிசம்பருக்குள் 'காஸ்' இணைப்பு பெற அரசு உத்தரவிட்டுள்ளது.சத்துணவு மையங்களில் விறகு அடுப்புகளால் சமையலர், உதவியாளர்களுக்கு நுரையீரல் பாதிப்பு, மூச்சுதிணறல் போன்றவை ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சத்துணவு மையங்களில் 'காஸ்' இணைப்பு பெறப்பட்டு வருகிறது. 

இதற்கான தொகை முதற்கட்டமாக சமூகநலத்துறை மூலம் வழங்கப்பட்டது. அதன்பின் நிறுத்தப்பட்டது. தற்போது எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் உள்ள 42,619 மையங்களில் 40 சதவீதம் மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து விடுப்பட்ட அனைத்து மையங்களிலும் இணைப்பு பெற அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு இணைப்புக்கும் ரூ.22,300 ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அடுப்பு, 'டியூப்,' மேடை அமைத்தல் போன்றவற்றிற்காக ரூ.16,400 ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான 'டெண்டர்' ஒன்றிய அளவில் விடப்பட உள்ளன. மீதத்தொகையில் 'காஸ்' இணைப்புக்கான 'டிபாசிட்' செலுத்தப்படும்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அருணாச்சலம் கூறுகையில், “திண்டுக்கல் மாவட்டத்தில் 1,351 மையங்களில் 624 ல் 'காஸ்' இணைப்பு உள்ளன. மீதமுள்ள மையங்களுக்கு விரைவில் இணைப்பு பெறப்படும்,” என்றார்.