Breaking News

நேதாஜி அஸ்தியை ஆய்வு செய்யுங்கள்


கோல்கட்டா:''ஜப்பானின் ரென்கோஜி கோவிலில் உள்ள, விமான விபத்தில் இறந்ததாக கூறப்படும் நேதாஜியின் அஸ்தியை,டி.என்.ஏ., சோதனை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும்,'' என, நேதாஜியின் மகள் அனிதா போஸ், 72, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனிப்படை:

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், நம் நாட்டை அடிமைப்படுத்தி இருந்த போது அவர்களை விரட்டியடிக்க, இந்திய தேசிய ராணுவம் என்ற பெயரில் தனி படையை உருவாக்கியவர், வங்கத்தைச் சேர்ந்த, நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்.அவர், கடந்த, 1945ல், ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் நாட்டில் நிகழ்ந்த விமான விபத்தில் இறந்ததாக கூறிய அப்போதைய ஆட்சியாளர்கள், அப்போதே அந்த விவகாரத்தை முடிந்து வைத்துஉள்ளனர்.

எனினும், 1947 வரை, நேதாஜி உயிருடன் இருந்தார் எனவும், அவரை இந்தியா வரவிடாமல் சில சக்திகள் தடுத்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால், அவரின் மரணம் இன்னமும்
கேள்விக்குறியாகவே உள்ளது.சில நாட்களுக்கு முன்,மேற்கு வங்க, திரிணமுல்
காங்கிரஸ் அரசு, நேதாஜி தொடர்பான, 64 ஆவணங்களை வெளியிட்டது. அதற்கு பின், அவரது மரணம் குறித்த சந்தேகங்கள் மேலும் வலுப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் வசித்து வரும் நேதாஜியின் மகள் அனிதா போஸ், பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:என் தந்தையின் மரணம் குறித்த சந்தேகம் இன்னமும் விலகவில்லை. எனவே, அவர் தொடர்பான கோப்புகள் அனைத்தையும், மத்தியஅரசு வெளியிட வேண்டும். அதுபோல, ஜப்பான், தைவான், பிரிட்டன் போன்ற நாடுகள் வசமுள்ள,என் தந்தை தொடர்பான கோப்புகளை வெளியிட, மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்; இதனால் பல உண்மைகள்தெரிய வரும்.

மேலும், ஜப்பானின் ரென்கோஜி கோவிலில் உள்ள, என் தந்தையின் அஸ்தி என கூறப்படும் சாம்பலை, டி.என்.ஏ., ஆய்வு மேற்கொண்டால் உண்மை வெளிவரும்.இதுகுறித்து, பிரதமர் மோடியிடம் விரைவில் வலியுறுத்துவேன்.இவ்வாறு, அனிதா போஸ் கூறினார்.

பொருளாதார மேதைஎமிலி என்ற வெளிநாட்டுப் பெண்ணை சுபாஷ்சந்திர போஸ் மணந்திருந்தார். அவர்களுக்கு பிறந்த ஒரே மகள் தான் அனிதா போஸ். பிறந்தது முதல் ஜெர்மனியில் வசிக்கும் அனிதா, அந்நாட்டின் சிறந்த பொருளாதார மேதையாக திகழ்கிறார்.
இவர், ஆக்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அந்நாட்டின் அரசியல் தலைவர்களில் ஒருவரான, பேராசிரியர் மார்ட்டின் பாப் என்பவரை மணந்து உள்ளார்.