Breaking News

அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை


மத்திய அரசு வழங்கியதுபோல், தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 
 இது தொடர்பாக அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வி, பொதுச் செயலர் இரா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: 

 மத்திய அரசு ஊழியர்களுக்கு 2015 ஜூலை முதல் தேதியிலிருந்து அகவிலைப்படியினை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது தற்போது வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 113 சதவீதம் என்பதை 119 சதவீதமாக உயர்த்தி வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
 விலைவாசி உயர்வைக் கருத்தில்கொண்டு மேற்படி அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு ஊழியர்களுக்கும் உடனடியாக வழங்கப்பட வேண்டும். எனவே, இதற்கான உத்தரவை பிறப்பித்திடுமாறு தமிழக அரசை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.