Breaking News

மாணவி ஒருவர்; ஆசிரியை இருவர்:அரசு ஆரம்ப பள்ளியில் அதிசயம்


பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட் டம், அய்யம்பாளையத்தில், ஒரு மாணவி படிக்கும் அரசு ஆரம்ப பள்ளியில், இரு ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். அய்யம்பாளையம், சந்தைப்பேட்டை பகுதிகளில், மூன்று அரசு ஆரம்ப பள்ளிகளும், ஒரு அரசு உதவிபெறும் ஆரம்ப பள்ளியும் செயல்படுகின்றன. சந்தைப்பேட் டை பள்ளியில், தலைமை ஆசிரியையாக, பரமேஸ்வரியும், உதவி ஆசிரியையாக, மகாராணியும் பணிபுரிகின்றனர்.
ஆனால், இப்பள்ளியில் இரண்டு ஆண்டுகளாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து, தற்போது, சத்தியப் பிரியா என்ற ஒரே ஒரு மாணவி மட்டும், மூன்றாம் வகுப்பு படிக்கிறார். இவரும், தலைமை ஆசிரியையின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு உணவு வழங்க, சமையல் உதவியாளரும் உள்ளார்.

தலைமை ஆசிரியை, பரமேஸ்வரி கூறியதாவது:உதவி ஆசிரியை, நீண்ட நாட்களாக டெபுடேஷனில், வேறொரு பள்ளிக்கு செல்கிறார். கடந்த ஆண்டு வரை, 21 மாணவர்கள் படித்தனர். இந்த ஆண்டு, ஆறு பேர் அனுமதிக்கப்பட்டு, கடைசியில் என் மகள் மட்டுமே உள்ளார். கல்வியாண்டு துவக்கத்தில், அதிகாரிகள் பார்வையிட்டு, அரசுக்கு கடிதம் அனுப்பினர்.இவ்வாறு அவர் கூறினார்.
அரசு பள்ளிகளில், குறிப்பாக ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, 'மளமள'வென சரிந்து வருகிறது என, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதை ஊர்ஜிதம் செய்யும் வகையில், பல ஆரம்ப பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தில் இருக்கிறது.