Breaking News

பேச்சுப் போட்டியில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவி உள்பட 5 பேர் ஜப்பானுக்கு சுற்றுலாச் செல்ல தேர்வு


பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.பவித்ரா உள்பட 5 மாணவர்கள் ஜப்பானுக்கு இலவச சுற்றுலாச் செல்ல தேர்வு செய்யப்பட்டனர்.
 தொழில்பயிற்சிக்காக ஜப்பான் சென்று திரும்பியவர்களால் தொடங்கப்பட்டது "ஏபிகே- ஏஓடிஎஸ் தோசோகாய்' தமிழ்நாடு மையம். இந்த மையம் "ஹியோஷி கார்ப்பரேஷன்' என்ற ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஆண்டுதோறும் அரசு, தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி கடந்த சில வாரங்களாக பல்வேறு சுற்றுகளாக நடைபெற்று வந்தது. பின்னர், பரிசளிப்பு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதர் ஷெஜிபாபா வழங்கினார். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடித்த மாணவர்களை ஜப்பானுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி 2 வார கால சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்கான செலவுகள் அனைத்தையும் ஹியோஷி நிறுவனம் ஏற்கிறது.

 முதலிடத்தைப் பிடித்த மாணவர்கள்: டி.பவித்ரா- பிளஸ் 2, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அசோக்நகர், சென்னை; எம்.ரூபன்- பிளஸ் 1, புனித மேரி மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்; ஆர்.ஆயுஷ், கே.சி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, காரப்பாக்கம், சென்னை; சிம்ஹாஞ்சனா, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை; ஆர்.துர்கா- நிகாங்கோ கேக்கோ ஜப்பான் மொழிப் பள்ளி, அரும்பாக்கம்.
 இது குறித்து மாணவி டி.பவித்ரா கூறியதாவது: எனது தந்தை தர்மன் கட்டுமானத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். பேச்சுப் போட்டில் வெற்றி பெற எனது ஆசிரியர்கள் மிகுந்த உறுதுணையாக இருந்தனர். தற்போது முதலிடத்தைப் பிடித்து ஜப்பானுக்குச் சுற்றுலா செல்லும் வாய்ப்பை பெற்றது எனது வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகும் என்றார்.