Breaking News

வேலூர், தி.மலை மாவட்டங்களில் கிடப்பில் கிடக்கும் எஸ்எஸ்ஏ திட்ட உபகரணங்கள் ஆசிரியர் பயிற்றுனர்கள் கடும் அவதி


வேலூர்,: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அலுவலக உபகரணங்கள் பழுதான நிலையில் அவற்றை சரிசெய்து பயன்படுத்தாமல் காட்சி பொருளாக வைத்துள்ளனர். இதனால் ஆசிரியர் பயிற்றுனர்கள் கடும் அவதிப்படுகின்றனர். 


வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பல வட்டார வள மையங்கள் உள்ளன. இங்கு ஆசிரியர்களுக்கான பயிற்சி, மீளாய்வுக் கூட்டங்கள் நடத்துவது, சுற்றறிக்கைகள் அனுப்புவது உட்பட கல்வி மற்றும் நிர்வாகப் பணிகள் நடக்கின்றன. இம்மையங்களுக்கு ஜெனரேட்டர், ஜெராக்ஸ் மெஷின்கள், கணினி, வீடியோ கான்பரன்ஸ் உட்பட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் பல மையங்களில் இந்த உபகரணங்கள் பழுது காரணமாக, மாதக்கணக்கில் பராமரிப்பின்றி முடங்கிக் கிடக்கின்றன. இவற்றை பழுது நீக்கினால் நன்றாக பயன்படுத்த முடியும் என்ற சூழ்நிலை இருந்தும் அவை குறித்து எந்த அதிகாரியும் அக்கறை செலுத்தவில்லை என பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது.

ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்க பள்ளிகளிலே மையங்கள் அமைக்கப்பட்டன. அதற்கான வகுப்பறை வசதி இல்லாததால் பல லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர் பயிற்றுனர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அனைத்து மையங்களிலும் உபகரணங்கள் கிடப்பில் உள்ளன என கூற முடியாது. சில மையங்களில் இப்பிரச்னை உள்ளன. முழு அளவில் உபகரணங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.