Breaking News

மாணவர்கள் குறைவு: சத்துணவு சிக்கல்


தமிழகத்தில் உள்ள, 42 ஆயிரம் சத்துணவு மையங்களில், 55 லட்சம் மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர். விதிமுறைப்படி, இந்த மையங்களில், தலா, 42 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர்கள், சத்துணவு உதவியாளர்கள், சத்துணவு சமையலர்கள் என, 1.26 லட்சம் பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 84 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர்; 42 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.


இந்நிலையில், 20க்கும் குறைவான மாணவர்கள் உள்ள சத்துணவு மையங்களை, அருகில் உள்ள சத்துணவு மையங்களுடன் இணைக்கவும், இங்கு பணிபுரிவோரை, பிற மையங்களில் உள்ள காலியிடங்களில் பணியில் அமர்த்தவும் அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பழனிநாதன் கூறுகையில், ''மாணவர்கள் குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூடிவிட்டு, அவர்களுக்கு மற்றொரு மையத்தில் இருந்து சத்துணவு எடுத்து வந்து தருவது என்பது, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த முடிவை அரசு கைவிடவேண்டும்,'' என்றார்