Breaking News

அரசாணை நகல் கேட்டு 'கிடுக்கிப்பிடி:' பள்ளிகளுக்கு நெருக்கடி


ஆசிரியர் பணியிடங்களுக்கான அரசாணையை கொண்டு வர, அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகள், 8,000த்துக்கும் மேல் உள்ளன. இவற்றில் படிக்கும், 33 லட்சம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க, 95 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்குகிறது. 

இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகள் சிலவற்றில், ஆசிரியர் பணியிடங்களுக்காக அரசிடம் நிதி பெறுவதிலும், அதை பயன்படுத்துவதிலும், குளறுபடி நடப்பதாக புகார்கள் வந்துள்ளன.

கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்ததில், அதிகாரிகளின் துணையுடன், அரசு நிதியுதவியில் மோசடி நடப்பது தெரியவந்துள்ளது. பள்ளியில் போதிய மாணவர் இல்லாத நிலையில், கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, அதற்கான அரசு சம்பளத்தில், சாதாரண அலுவலக பணிக்கு, ஆட்களை நியமிப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அனைத்து அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் அழைத்து ஆலோசனை நடத்துமாறு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்போது, அனைத்து அரசு உதவிப் பெறும் பள்ளிகளும், தங்கள் பள்ளியில் எத்தனை ஆசிரியர்கள் பணியாற்று கின்றனர்; அவர்களில் எத்தனை பேருக்கு அரசு ஊதியம் கிடைக்கிறது என்ற தகவலையும் கேட்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் அதில், அரசு உதவி ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் எப்போது துவங்கியது; அதற்கான அனுமதி எண்; அனுமதி பெற்றபோது மாணவர் எண்ணிக்கை, தற்போதுள்ள மாணவர் எண்ணிக்கை போன்ற விவரங்களுடன், ஆசிரியர் பணியிட அனுமதிக்கான அசல் அரசாணையையும், தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல பள்ளிகளிடம், ஆசிரியர் நியமனத்திற்கான அரசாணை நகல் கூட இல்லை. சில பள்ளிகள், அரசு முத்திரை இல்லாத, கிழிந்த தாளை வைத்துக்கொண்டு, 'இதுதான் அரசாணை' என, 

கல்வித்துறையில் முறையிட்டுள்ளன. இதனால், ஆவணங்கள் இல்லாத, அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர் பணியிடங்கள் ரத்து செய்யப்படலாம் என, கூறப்படுகிறது.