Breaking News

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: வரும் 17-இல் பொது விடுமுறைவிட அரசு முடிவு?

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, வரும் 17-ஆம் தேதியன்று அரசு விடுமுறை விட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வியாழக்கிழமை (ஜன.12) வெளியாகவுள்ளது. 


அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா வரும் 17-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தினத்தை ஒட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆளும்கட்சியான அதிமுக ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

மேலும், ஆண்டு முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்த தினத்தைக் கொண்டாடவும் அந்தக் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசு விடுமுறை: கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒருபுறம் இருக்க, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த தினம் என்பதால் வரும் 17-ஆம் தேதியன்று அரசு விடுமுறை விட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, அரசுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: 

அரசு பொது விடுமுறை விட வேண்டுமென்றால், அதற்கான கோப்புகள் பொதுத் துறையின் மூலமாக தயார் செய்யப்பட்டு முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், இந்த பொது விடுமுறை என்பது ஊதியத்துடன் கூடியதாக இருக்கும். மத்திய-மாநில அரசுகளின் விடுமுறைப் பட்டியலில் இல்லாத தினங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க முடியாது. எனவே, இதற்கென தனியான உத்தரவு பிறப்பிக்கப்படும் பட்சத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கொடுக்கப்படும்.

இந்த விடுமுறையை விடுவதற்கான கோப்புகள் கையெழுத்திடப்பட்டு, அதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை (ஜன.12) அல்லது வெள்ளிக்கிழமை (ஜன.13) வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன