Breaking News

அரசு பள்ளிகளில் ஊதிய உயர்வு இல்லாத 15 ஆயிரம் தொகுப்பூதிய பகுதிநேர பயிற்றுநர்கள்


       அரசுப் பள்ளிகளில் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாததாலும், பணி நிரந்தரம் செய்யாததாலும் அவதியடைந்து வருகின்றனர்.

கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் 16 ஆயிரத்து 549 பேர் பகுதிநேர பயிற்றுநர்கள் நியமனம் செய்யப்பட்டனர். உடற்கல்வி, ஓவியம், கணினி, தோட்டக்கலை, தையல், இசை  ஆகிய பாடங்களை 6 வகுப்பு முதல் உள்ள 8 வகுப்பு மாணவர்களுக்கு பகுதி நேரமாக நடத்திட இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ரூ 5 ஆயிரம் தொகுப்பு ஊதியத்துக்கு பணியமர்த்தப்பட்டனர்.



வாரம் மூன்று அரைநாளாக, மாதத்திற்கு பன்னிரண்டு அரைநாளாக  இவர்கள் பணி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இவர்களுக்கு முதல் முறையாக கடந்த 2014 ஏப்ரல் மாதம்  ரூ.2ஆயிரம் உயர்த்தப்பட்டு தற்போது ரூ7 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஐந்து ஆண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பண்டிகை போனஸ் கூட வழங்கப்படவில்லை. பணியின்போது இறந்தவர்களுக்கு இழப்பீடு, பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் அளிக்கப்படவில்லை.  பகுதிநேர மகளிர் பயிற்றுனர்களுக்கு விடுமுறையுடன் கூடிய மகப்பேறு கால விடுப்பும் தருவதில்லை. இவர்களுக்கு 12 மாதமும் சம்பளம் வழங்காமல் 11 மாதத்திற்கு மட்டும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.16 ஆயிரத்து 549 பேரில் தற்போது சுமார் 15 ஆயிரம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

டாஸ்மாக் மதுபான கடை பணியாளர்களுக்கு ஆண்டு வாரியாக தொகுப்பூதியம் உயர்த்திவழங்கப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சி துறையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் கணினி இயக்குபவர்களுக்கும் ஆண்டு வாரியாக தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பகுதி நேர  பயிற்றுனர்களுக்கு   தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படவில்லை.

கோவா மாநிலத்தில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மாதம்ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருவதைப்போல தமிழத்திலும் வழங்க வேண்டும். கேரள மாநிலத்தில் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு வேலை வழங்கப்படும் முறையை தமிழத்திலும் வழங்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது. சமவேலை, சம ஊதியம் என்ற தத்துவத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.கெஹர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் பஞ்சாப் மாநில ஒப்பந்த தொழிலாளிக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், தற்காலிக, ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய பணி செய்பவர்களுக்கு  அரசு ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்று பகுதி நேர பயிற்றுனர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இவர்கள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 இதுகுறித்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தொகுப்பூதிய பகுதிநேர பயிற்றுநர்களின்  மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் கூறுகையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 அறிவிப்பு வெளியிட்டு தான் எங்களை நியமனம் செய்தார். ஆனால் இதுவரை  எங்களுக்கு ஆண்டுதோறும் வழக்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. பணி நிரந்தரம் மற்றும் பணப்பயன்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்கள் மீது அரசு கருணை கொண்டு எங்களை பணி நிரந்தரம் செய்து அரசு சலுகைகள் அனைத்தும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


முதல்வர் பன்னீர்செல்வம் நிதி அமைச்சாராக  இருந்த போது கடந்த 2016 பிப்ரவரி மாதம் தொகுப்பூதிய பகுதிநேர பயிற்றுநர்கள்  அவரிடம்  மனு அளித்தனர்.