Breaking News

உதவி பெறும் பள்ளியில் ஆய்வு நடத்த உத்தரவு.


அரசு உதவி பெறும் பள்ளிகளின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை தருமாறு, மாவட்ட அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. ஆசிரியர்களுக்கு சம்பளம், பள்ளி பராமரிப்பு செலவு மற்றும் மாணவர்களுக்கான சலுகைகளை, அரசே ஏற்றுக்கொள்கிறது. 


இப்பள்ளிகளில் பல, சுயநிதி பள்ளிகளை போல் செயல்பட்டு, பெற்றோர்களிடம் கட்டணம் என்ற பெயரில், அதிக தொகை வசூலிப்பதாக புகார் எழுந்து வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளின் அங்கீகாரம், மூன்று ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்; அங்கீகாரம் புதுப்பித்தால் மட்டுமே, அப்பள்ளி மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு எழுத முடியும். 


இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகள் குறித்து ஆய்வு நடத்த, பள்ளி கல்வித்துறை, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் எண்ணிக்கை, பணி காலம், பாடப்பிரிவுகள், மாணவர்களுக்கான அரசு சலுகை குறித்து விவரம் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் கட்டண வசூல் குறித்து, விசாரணை நடத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அரசு உதவி பெறும் பள்ளிகளை, பாமர மக்கள் பலரும் தனியார் பள்ளி என தவறாக கருதுவதால், பள்ளி முன் வளாக பகுதியில், "அரசு உதவி பெறும் பள்ளி' என பெயர் பலகை வைக்க, பள்ளி கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. பெரும்பாலான பள்ளிகளில், இப் பலகை வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதிகாரிகள் ஆய்வில், இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.