Breaking News

சிறார்களுக்கு பீடி, சிகரெட், பான்பராக் விற்றால் 7 ஆண்டு 'கம்பி' எண்ணணும்: ரூ.ஒரு லட்சம் அபராதமும் உண்டு என புதிய சட்டத்தில் தகவல்


சிறார்களுக்கு, பீடி, சிகரெட், மது, பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு, ஏழு ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும், புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

கடந்த மாதம் முடிவடைந்த, பார்லிமென்டின் குளிர் கால கூட்டத் தொடரில், சிறார் நீதிச்சட்ட திருத்த மசோதா - 2015 நிறைவேற்றப்பட்டது. இதற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஒப்புதல் அளித்ததை அடுத்து, அந்தச் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கான அரசாணையை, குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
* சிறார்களை பிச்சை எடுக்க பயன்படுத்துவது, அவர்களுக்கு, பீடி, சிகரெட், மது, 'குட்கா, பான் மசாலா ' உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும்
போதை வஸ்துகளை விற்பது, தண்டனைக்குரிய குற்றம்
* இவ்வகை குற்றங்களுக்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அதில் அம்சங்கள் உள்ளன.

சிறார்கள் பலாத்காரம் செய்தால்...:
பாலியல் பலாத்காரம் போன்ற, கொடிய குற்றங்களில் ஈடுபடும், 16 - 18 வயதுள்ளோரை, சிறாராக கருதாமல், பெரியவர்களாக கருதி, கடும் தண்டனை வழங்க,இந்த சட்டம் வகை செய்கிறது. எனினும், சிறார் நீதி வாரியம், முதற்கட்ட விசாரணை நடத்தி அளிக்கும் பரிந்துரையை அடுத்தே, சிறுவர் நீதிமன்றம், தண்டனை குறித்து தீர்மானிக்கும். அத்தகைய சிறுவர்கள், 21 வயதாகும் வரை, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்படுவர். அவர்கள், 21 வயதை எட்டிய பிறகும், திருந்தவில்லை என தெரிய வந்தால், பெரியவர்களுக்கான சிறைக்கு அனுப்பப்படுவர். ராஜஸ்தான், ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில், தண்டனை பெற்ற சிறார்களுக்கான, பாதுகாப்பு மையங்கள் இல்லாததால், பொது சிறைக்கு அனுப்பி வைக்கும் கொடுமை உள்ளது.ஐ.நா., குழந்தைகள் உரிமை மாநாட்டு தீர்மானத்தின் படி, 18 வயதிற்கு உட்பட்ட அனைவரையும், சிறாராக, சமமாக கருத வேண்டும்
Advertisement
என்பதை உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவின் புதிய சட்டம், கொடுங்குற்றங்களுக்கு, சிறாரை, பெரியவர்களாக கருத வகை செய்துள்ளது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது தான் புதிய சட்டம்:
* சிறார் நீதி சட்டம், 2000த்திற்கு மாற்றாக, புதிய சட்டம் அறிமுகமாகி உள்ளது
* சிறார் குற்றங்கள் தொடர்பான அனைத்து சட்டப் பிரச்னைகளுக்கும், புதிய சட்டம் தீர்வளிக்கிறது
* குற்றம் சாட்டப்படும் சிறார்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கு, சட்டம் உறுதி அளிக்கிறது
* ஒவ்வொரு மாவட்டத்திலும், சிறார் நீதி வாரியங்கள் மற்றும் சிறார் நல்வாழ்வு குழுக்கள் அமைக்க வேண்டும்
* குற்றச் செயல் குறித்து, சிறார் நீதி வாரியம் முதற்கட்ட விசாரணை நடத்தி, சிறாரை, மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புவதா அல்லது, பெரியவராக கருதி தண்டனைக்கு பரிந்துரைப்பதா என்பதை முடிவு செய்யும்
* சிறாருக்கு வழங்கும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து, சிறார் நல்வாழ்வு குழு தீர்மானிக்கும்
* சிறுவர், சிறுமியரை தத்தெடுக்கும் பெற்றோரின் தகுதி மற்றும் தத்தெடுக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்
* சிறுவர்களை துன்புறுத்துவது, போதை பொருட்கள் வழங்குவது, கடத்துவது, குழந்தைகளை விற்பது போன்றவற்றுக்கு கடும் தண்டனை உண்டு.