Breaking News

போலிச் சான்றிதழ் விவகாரம்ஜாமீன் கோரிய இருவரின் மனுக்கள் தள்ளுபடி


தருமபுரியில் போலிச் சான்றிதழ் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட இருவர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை பாலக்கோடு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு பணியிட மாற்றத்தின் போது இவரது சான்றிதழ்களை சரிபார்த்த கல்வித் துறை அதிகாரிகள், அதில் உண்மை தன்மை இல்லாததால், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர். இதன் பேரில், வழக்குப் பதிவு செய்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்ததில், முனியப்பன் போலியாகச் சான்றிதழ் தயாரித்து கல்வித் துறையில் சமர்ப்பித்து ஆசிரியராகப் பணியாற்றி வந்தது தெரியவந்தது.


இதனைத் தொடர்ந்து, முனியப்பன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக ராஜேந்திரன் ஆகியோரை குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில், சிறையில் உள்ள இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, பாலக்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை, திங்கள்கிழமை விசாரித்த நடுவர் ராமச்சந்திரன், இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.