Breaking News

பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை துவக்கம் - தேர்வு விதிகள்


பிளஸ் 2 பொதுத்தேர்வில், முதற்கட்டமாக, செய்முறை தேர்வு, நாளை துவங்குகிறது. தேர்வின் போது, ஆய்வகங்களில் அதிரடி சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும், மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 4ம் தேதி, பொதுத்தேர்வு துவங்கி, ஏப்., 1ம் தேதி முடிகிறது; 8.80 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். 


முதற்கட்டமாக, நாளை செய்முறை தேர்வு துவங்குகிறது. தமிழகம் முழுவதும், இரண்டு பிரிவுகளாக இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. சில பள்ளிகளுக்கு, நாளை முதல், பிப்., 15ம் தேதி வரையிலும்; சில பள்ளிகளுக்கு, பிப்., 16ம் தேதி முதல், 25ம் தேதி வரையிலும் நடக்க உள்ளன.


செய்முறை தேர்வில், மாணவர்களின் செயல்முறை பதிவேடு நோட்டு புத்தகம் அடிப்படையிலும், ஆய்வகத்தில் நேரடி செய்முறை பயிற்சியின் அடிப்படையிலும், மதிப்பெண் வழங்கப்படும். ஆய்வகங்களுக்கு, வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள், கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வின் போது, ஆய்வகங்களில் முறைகேட்டை தடுக்க, பறக்கும்படையினர் ஆய்வு நடத்த உத்தர விடப்பட்டு உள்ளது. 


குறிப்பாக, தனியார் பள்ளி களை அதிகளவில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

தேர்வு விதிகள்

* செய்முறை நோட்டு புத்தகத்தை சமர்ப்பிக்காதவர்களுகக்கு, 20 மதிப்பெண் ரத்து செய்யப்படும்
* இயற்பியல் மாணவர்களுக்கு, 'டிஜிட்டல் டைரி' அல்லாத அறிவியல், 'கால்குலேட்டர்' மட்டும் ஆய்வகங்களில் அனுமதிக்கப்படும்
* இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நர்சிங், உயிரி வேதியியல் உட்பட, 15 பாடங்களுக்கு, செய்முறை தேர்வு நடத்த வேண்டும்
* தேர்வு மதிப்பெண் பட்டியலை, எந்த காரணத்தை கொண்டும், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட யாருக்கும் கசிந்து விடாமல், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்
* ஒழுங்கீனம், விதிமீறல் இருந்தால், அதற்கு தேர்வு நடத்தும் தலைமை ஆசிரியரும், கண்காணிப்பாளரும் பொறுப்பு
* ஆய்வகங்களில், செய்முறை தேர்வுக்கு தேவையான அனைத்து அறிவியல் உபகரணங்கள், ரசாயன, உயிரி பொருட்களை தேவையான அளவு வைத்திருக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.