Breaking News

கலாந்தாய்வில் முறைகேட்டை தட்டிக்கேட்ட ஆசிரியரை முகத்தில் குத்திய அதிகாரி


தசிவகங்கை:  முறைகேட்டை தட்டிக் கேட்டததால் ஆத்திரமடைந்த கல்வித்துறை அலுவலர், ஆசிரியரை தாக்கினார். சிவகங்கை  மருதுபாண்டியர் நகரில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க வளாகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கலாந்தாய்வு  நேற்று  நடந்தது. அதில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், காளையார்கோவில், மானாமதுரை,  இளையான்குடி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காலி பணியிடங்கள்  மறைக்கப்படுவது குறித்து கல்வித்துறை அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினர்.  இயக்குநர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின்படியே கலந்தாய்வு நடப்பதாக அலுவலர்கள் பதிலளித்தனர்.
இதனால் ஆசிரியர்களுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முறைகேட்டை தட்டிக் கேட்ட   தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி சக்திவேலை, கல்வித்துறை அலுவலக எழுத்தர் கலைமணி திடீரென தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து அதிகாரிகளை, ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். 


தொடக்கக்கல்வி அலுவலர்  அப்துல் ரஹீமிடம், எழுத்தர் கலைமணி குறித்து புகார் மனு அளித்தனர். ஆனால், அதை  அவர் வாங்க மறுத்தார். இதனால் ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்  கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் சிவகங்கை டவுன் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி  பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து  இடமாறுதல் கலந்தாய்விற்கான காலியிடங்கள் அடிப்படையில், பதவி உயர்விற்கான  கலந்தாய்வை நடத்துவோம் என அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியர்கள்  அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘கலந்தாய்வு வெறும் கண்துடைப்பாக நடக்கிறது. காலியிடங்களுக்கு ஏற்கனவே லஞ்சம் வாங்கிக்  கொண்டு, பணியிடங்களை மறைக்கின்றனர். இந்த கலந்தாய்வை ரத்து செய்து, முறையாக  நடத்த வேண்டும்,’’ என்றனர்.