Breaking News

மாணவர்களிடம் ஆதார் எண் கேட்காதீர் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்


விருதுநகர்: கல்வி உதவித்தொகை பெற மாணவர்களிடம் ஆதார் எண் கேட்டு கட்டாயப்படுத்த வேண்டாம் என, தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான உதவித்தொகை, 9ம் வகுப்பு எஸ்.சி.,எஸ்.டி.,பிரிவு மாணவிகளுக்கான உதவித்தொகை, தேசிய வருவாய் திறன்வழித்தேர்வு உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை என மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கல்வி உதவித்தொகைகள் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

அதற்கு மாணவர்கள் ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆதார் அட்டை இல்லாதவர்கள் அதற்கான புகைப்படம் எடுத்துவருகின்றனர். இந்நிலையில் ரேஷன், காஸ்,மண்ணெண்ணெய் வினியோகம் தவிர்த்து பிற அரசு நலத்திட்டங்களை பெற ஆதார் எண் சமர்ப்பிக்க கட்டாயப்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக மாணவர்களிடம் ஆதார் எண் கேட்க வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது. மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கல்வி உதவித்தொகை வழங்க மாணவர்களின் வங்கி கணக்கு எண் பெற்றால் போதுமானது.
ஆதார் எண் கேட்டு கட்டாயப்படுத்த வேண்டாம் என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லை என்ற காரணத்திற்காக லேப்டாப் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை நிறுத்தாமல் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,”என்றார்.