Breaking News

தொடக்க கல்வி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு என புகார்: காலியிடம் மறைத்தது ஏன்? ஆசிரியர்கள் போராட்டம்




வேலூர்: வேலூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடுகள் நடக்கிறது என்று கூறி ஆசிரியர்கள் உள்ளிருப்பு ேபாராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் டான்போஸ்கோ பள்ளியில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. 
இதில் தாலூகா வாரியாக பணியிட மாறுதல் பட்டியலை மாவட்ட கல்வி அதிகாரிகள் வாசிக்க தொடங்கினர். அப்போது திடீரென காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் சிஇஓ பூபதி மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அவர்கள் அதிகாரிகளிடம், ‘அமீத்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பணியில் இருந்த தலைமையாசிரியர் உதயகுமார் இறந்துவிட்டார். அந்த இடத்திற்கான அறிவிப்பு வெளியிடாமல், கலந்தாய்வு நடைபெறாமலும் எப்படி பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது. இதற்காக ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பட்டியலை நோட்டீஸ் போர்டில் ஒட்டாதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினர். மேலும் முறைகேடாக நடக்கும் கலந்தாய்வை உடனடியாக நிறுத்தும்படி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் அணைக்கட்டு ஒன்றியம் வேப்பங்கால், பிராமண மங்கலம், கரடிகுடி ஆகிய பகுதிகளிலும், நாட்றம்பள்ளியிலும் கலந்தாய்வு நடத்தாமல் முறைகேடாக பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறி ஆசியர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அதிகாரிகள் சட்ட விதிகளின்படி பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. எனவே அதில் மாற்றம் செய்ய முடியாது என பதில் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் கலந்தாய்வை நிறுத்த வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தரையில் அமர்ந்து கல்வி அதிகாரிகளை கண்டித்தும், எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தெற்கு போலீசார், ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஆசிரியர்கள் கலந்தாய்வை நிறுத்தக்கோரி தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் ஒரு சிலருக்கு மட்டும் பணியிட மாறுதலுக்கான ஆணையை மாவட்ட கல்வி அதிகாரிகள் வழங்கினர்