Breaking News

மாணவர்கள் தமிழ் வாசித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு


அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழியை ஊக்குவிக்க, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, சர்வ சிக்ச அபியான் - எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் பரிசு வழங்கப்பட உள்ளது.
பள்ளிகளில்...:
தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தமிழில் மாணவர்களை வாசிக்க வைத்தால், தனித்தனியே பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.இதன்படி, தொடக்கப் பள்ளிகளில், 4, 5ம் வகுப்பு; நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள், தமிழில் நன்றாக வாசிக்க வேண்டும்.ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு மாணவரையும் தமிழில் பிழையின்றி, நிறுத்தி வாசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். பாடப்புத்தகங்கள், பத்திரிகை போன்றவற்றை மாணவர்கள் வாசிக்க வேண்டும். எழுத்துக்களின்நடைக்கேற்ப, குறியீடுகளுக்கு ஏற்றவாறு, நிறுத்தி, நிதானமாக வாசித்தாக வேண்டும்.
நுாலக வசதி:

இதில், 50 மாணவர்களை உடைய பள்ளிக்கு, 20 ஆயிரம்; 100 மாணவர் வரை, 30 ஆயிரம்; 150 மாணவர் வரை, 40 ஆயிரம்; 151க்கு மேல் மாணவர்களை கொண்டுள்ள பள்ளிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும். இந்த தொகையில், பள்ளி உள்கட்டமைப்பு, நுாலகம் போன்ற வசதிகளை ஏற்படுத்தலாம்.
இந்த பரிசு தொகையை பெற, அனைத்து அரசு பள்ளிகளும், வரும், 7ம் தேதிக்குள், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் வழியே, எஸ்.எஸ்.ஏ., மாநில தலைமை அலுவலகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். மூன்று மாதம் மாணவர்களுக்கு தமிழ் வாசிப்பு பயிற்சி அளித்த பின், டிசம்பரில் ஆய்வு நடத்தப்படும்.அதைத் தொடர்ந்து, வெற்றி பெறும் பள்ளிகளுக்கு, பரிசுத் தொகை வழங்கப்படும் என, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.