Breaking News

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் வழங்கக் கோரி வேலூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வி.செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கே.ரவி, இணைச் செயலாளர்கள் எம்.ஏழுமலை, கே.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் பி.செல்வம் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் பி.ஆறுமுகம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் வழங்குவது, பணிக்கொடையை ரூ. 3 லட்சமாக உயர்த்தி வழங்குவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.