Breaking News

பத்தாவது நாளாக பள்ளிகள் மூடல்:பல்கலை தேர்வுகள் மீண்டும் ரத்து


சென்னை:தொடர்ந்து, 10வது நாளாக, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தீபாவளியை முன்னிட்டு, 6ம் தேதி சனிக்கிழமை முதல், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது; தீபாவளி முடிந்து, 11ம் தேதி பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், கனமழை காரணமாக கடலுார், விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், 11ம் தேதி பள்ளிகளை திறக்க முடியவில்லை; திறந்திருந்த பள்ளிகளும், பாதியில் மூடப்பட்டன.இதையடுத்து, தொடர் மழை பெய்ததால், 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. இன்றும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு டிசம்பர் முதல் வாரத்தில், அரையாண்டுத் தேர்வு; மற்ற வகுப்புகளுக்கு இரண்டாம் பருவ தேர்வு நடக்கவுள்ள நிலையில், தொடர்ந்து, 10வது நாளாக, பள்ளிகள் இயங்கவில்லை.இன்றும் நாளையும்...: சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்புக் கல்லுாரிகளில் நடக்கவிருந்த தேர்வுகள், இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலை தேர்வுகள், நாளை வரை, ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 19ம் தேதி முதல், 21ம் தேதி வரையான தேர்வுகளும், ரத்து செய்யப்பட்டுள்ளதாக, பல்கலை பதிவாளர் கணேசன் அறிவித்துள்ளார்.சட்டப் பல்கலையிலும், நாளை வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.