Breaking News

வீடு, கார், இருசக்கர வாகனங்கள் விற்பனை எகிறும்: 7-வது ஊதிய குழு பரிந்துரை அமலாகும் போது


புதுடில்லி: 'ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டில் அமல்படுத்தப்படும் போது, மத்திய அரசு ஊழியர்களின் கையில், தாராளமான பணப்புழக்கம் இருக்கும்; இதனால், வீடு, கார், டூ - வீலர், வீட்டு உபயோகப்பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை எகிறும்' என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், 2016 ஜன., 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என, ஒரு கோடி பேரின் மாதாந்திர சம்பளம் மற்றும் ஓய்வூதியம், 23 சதவீதம் அளவுக்கு உயரும். அப்போது, அவர்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அந்த பணத்தை, அவர்கள் உபயோகமாக செலவழிக்க திட்டமிடுவர்.


குறிப்பாக, 'குறைந்த விலையில் வீடுகள், கார்கள், இருசக்கர வாகனங்கள், நுகர்வோர் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களை வாங்க முற்படுவர். இதனால், அவற்றின் உற்பத்தியும், விற்பனையும் அதிகரிக்கும். இது, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்' என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


பொருளாதார வளர்ச்சி 0.65 சதவீதம்:


அடுத்த ஆண்டு ஜனவரியில் அமல்படுத்தப்பட உள்ள, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 0.65 சதவீதம் கூடும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது; இது, ஆறாவது ஊதியக் குழுவின் போது, 0.77 சதவீதமாக இருந்தது.
* ஊதியக் குழு பரிந்துரையை செயல்படுத்தும் போது, 2016 - 17ம் நிதியாண்டில், மத்திய அரசுக்கு, 1.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இது, மத்திய பட்ஜெட்டில், 73 ஆயிரத்து, 650 கோடி ரூபாய், ரயில்வே பட்ஜெட்டில், 28 ஆயிரத்து, 450 கோடி ரூபாய் என, பகிர்ந்து கொள்ளப்படும்
* ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளை, 23.55 சதவீதம் உயர்த்தி வழங்க, பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அடிப்படை சம்பளம் மட்டும், 16 சதவீத அளவுக்கும், அனைத்து விதமான படிகளும், 63 சதவீதம் அளவுக்கும் உயரும். சம்பளத்திற்கான அரசின் செலவு, 39 ஆயிரத்து, 100 கோடி ரூபாய் அதிகரித்து, இரண்டு லட்சத்து, 83 ஆயிரத்து, 400 கோடி ரூபாயாக இருக்கும். 
படிகளுக்கான செலவு, 12 ஆயிரத்து, 100 கோடி ரூபாய் அதிகரித்து, 36 ஆயிரத்து, 400 கோடி ரூபாயாக இருக்கும். ஓய்வூதியத்திற்கான செலவு, 33 ஆயிரத்து, 700 கோடி அதிகரித்து, ஒரு லட்சத்து, 76 ஆயிரத்து, 300 கோடி ரூபாயாக இருக்கும் 
* முன்னாள் ராணுவத்தினருக்கு, 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை அமல்படுத்தப்பட உள்ளதால், சம்பள கமிஷன் பரிந்துரை அமல் கூடுதல் சுமையாகும்.

23.55 %:மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், படிகள் மற்றும் பென்ஷன் உயர்வு
16 %:அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் உயர்வு
63 %:படிகளில் உயர்வு
24 %:பென்ஷனில் உயர்வு

52ரத்து:* ரயில்வே ஊழியர் மற்றும் கேபினட்செயலர்களுக்கான கேளிக்கை படி
* குடும்ப கட்டுப்பாடு, முடி வெட்ட, பரிசோதனை, இறுதிச்சடங்கு, சேமிப்புக் கணக்கு, கூடுதல் வேலை படிகள்
* நர்சிங் ஊழியர்களுக்கான உணவக படி

36:பிற படிகளுடன் இணைப்பு
* வாஷிங் அலவன்ஸ் எனப்படும் துணி துவைப்பு படி இணைப்பு
* குறிப்பிட்ட இடங்களுக்கான படிகள், இடர்பாடு மற்றும் கடினப்பணி படியில் இணைப்பு

108:தொடரும், கூடுதலாகியுள்ள படிகள்
* மாற்றுப்பணி, தேசிய விடுமுறை மற்றும் மொழி படிகள், 50 சதவீதமாக அதிகரிப்பு
* இணையதளம், மொபைல், செய்தித்தாள் படிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன
* வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது வழங்கப்படும் தினப்படி தொடர்கிறது


தொடர்கிறதுமகப்பேறு 'லீவு':


ஆண், பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை நாட்களை, அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, ஏழாவது ஊதியக் குழு நிராகரித்து உள்ளது. எனவே, வழக்கம் போல, மகப்பேறின் போது, பெண் ஊழியர்களுக்கு, 180 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. ஆண் ஊழியரின் மனைவியின் பிரசவத்தின் போது, அந்த ஊழியருக்கு, 15 நாட்கள் மகப்பேறு விடுமுறை தொடர்கிறது. இந்த சலுகை, இரு குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்.


ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு படி:


மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு மட்டும், இதுவரை வழங்கப்பட்டு வந்த, சி.சி.எல்., என்ற, 'சைல்ட் கேர் லீவ்' எனப்படும், குழந்தை பராமரிப்பு விடுமுறை, இப்போது ஆண்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. மனைவி இல்லாத ஆண் ஊழியர்கள், தங்களின், 18 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளை பராமரிக்க, அவர்களின் பணிக்காலத்தில், இரு ஆண்டுகள் சம்பளத்துடன் விடுமுறை பெற்றுக் கொள்ளலாம். முதல் ஆண்டில், 100 சதவீத சம்பளமும், இரண்டாவது ஆண்டில், 80 சதவீத சம்பளமும், ஆண் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே அமலில் உள்ளபடி, கணவர் இல்லாத அரசு பெண் ஊழியருக்கு, வழக்கம் போல இந்த சலுகை தொடரும். 


இரண்டு தவணைகளாகமுந்தைய பரிந்துரை:


கடந்த, 2006ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட, ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், இரு ஆண்டுகள் கழித்து தான் அமல்படுத்தப்பட்டன. அதனால் மத்திய அரசின் சம்பள பில், 35 சதவீதம் அதிகரித்து, சம்பள உயர்வை மொத்தமாக கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு, 40 சதவீத தொகை, 2008 - 09ம் ஆண்டிலும், 60 சதவீத தொகை, 2009 - 10ம்நிதியாண்டிலும் வழங்கப்பட்டது.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை, அடுத்த ஆண்டு அமல்படுத்துவதால், நிதிப் பற்றாக்குறை மிக அதிகரிக்கும் என்ற அச்சம் தேவையில்லை. சற்றே அதிகரிக்கும் நிதிப் பற்றாக்குறையையும் கட்டுப்படுத்தி விடுவோம். பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தச் செலவுகள் திடீரென வந்ததல்ல; ஏற்கனவே எதிர்பார்த்தது தான்
சக்திகந்த தாஸ், பொருளாதார துறை செயலர்


குறைந்தபட்ச சம்பள உயர்வு, 18 ஆயிரம், அதிகபட்ச சம்பள உயர்வு, 2.5 லட்சம் ரூபாய்ஆண்டுக்கு, 3 சதவீத சம்பள உயர்வுக்கு சம்பள கமிஷன் பரிந்துரை
சம்பள கமிஷன் பரிந்துரையால், ஆண்டுக்கு, 1.02 லட்சம் கோடி நிதிச்சுமை ஏற்படும்
'கிரேடு சம்பளம், பே பேண்ட்' முறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
சியாச்சின் பகுதியில் பாதுகாப்பு வீரர்களுக்கு, மாத சம்பளத்தில், 21 - 31 ஆயிரம் ரூபாய் வரை உயர்வு

சம்பளத்தை அதிகம் சாப்பிடும் நான்கு துறைகள்
ரயில்வே: 36.60 %
உள்துறை: 23.98%
பிற துறைகள்: 19.17%
பாதுகாப்புத்துறை (சிவில்): 12.16%
தபால் துறை: 8.09%