Breaking News

அண்ணா பல்கலை. தேர்வுகள் மேலும் 2 நாள் ஒத்திவைப்பு


தொடர் மழை பெய்ததன் காரணமாக மேலும் இரண்டு நாள்கள் நடைபெற இருந்தத் தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்தி வைத்துள்ளது.

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.


இந்த பாதிப்பு காரணமாக, வியாழக்கிழமையன்று நடைபெற இருந்தத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், வெள்ள பாதிப்பு அடைந்த பகுதிகள் முழுமையாக சீரடைந்து மாணவர்கள் எந்தவித சிரமுமின்றி தேர்வெழுத வரும் வகையில் மேலும் இரண்டு நாள் தேர்வுகளை பல்கலைக்கழகம் இப்போது ஒத்தி வைத்துள்ளது.

அதாவது நவம்பர் 12, 13, 14 ஆகிய மூன்று நாள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுகள் பல்கலைக்கழகத் துறைகளில் (கிண்டி பொறியியல் கல்லூரி, எம்ஐடி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கட்டடவியல் பள்ளி) படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளன.

இதுபோல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நவம்பர் 12-இல் நடைபெற இருந்த தேர்வு டிசம்பர் 21 ஆம் தேதியும், நவம்பர் 13 இல் நடைபெற இருந்த தேர்வு டிசம்பர் 22 ஆம் தேதியும், நவம்பர் 14 இல் நடத்தப்பட இருந்த தேர்வு டிசம்பர் 24 ஆம் தேதியும் நடத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை பார்க்கவும்.