Breaking News

செய்முறை பயிற்சி தேர்வு உண்டா 10ம் வகுப்பு மாணவர்கள் குழப்பம்


அறிவியல் செய்முறை புத்தகம் வழங்காததால், அதற்கான பயிற்சி தேர்வு நடைபெறுமா என்ற குழப்பம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி பாடத்திட்டம் துவங்கிய பின், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் ஆய்வகத்தில், செய்முறை பயிற்சியும், செய்முறை தேர்வும் நடத்தப்படுகிறது. இதற்காக, 75 மதிப்பெண், 'தியரி'க்கும், 25 மதிப்பெண் அறிவியல் செய்முறை பயிற்சிக்கும் தரப்படுகிறது. இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு தலா,
நான்கு செய்முறை பயிற்சிகள் உள்ளன.இவற்றில், தலா, ஒரு பயிற்சி வீதம், மொத்தம், நான்கு கேள்விகள், செய்முறை தேர்வில் இடம் பெறும். இதற்காக, செய்முறை பயிற்சி நோட்டுப் புத்தகமும், பாட புத்தகமும் இலவசமாக வழங்கப்படும். காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்ததும், இந்த புத்தகங்கள் வழங்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படும்.
ஆனால், இந்த ஆண்டு, அரையாண்டு தேர்வு நெருங்கி விட்ட நிலையில், இன்னும் செய்முறை புத்தகம் வழங்கவில்லை. அதனால் பாட புத்தகத்தில் பின்பக்கம் உள்ள குறிப்புகளை வைத்து, ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். அதிலும், இந்த ஆண்டு, 16 செய்முறைக்கு பதில், 15 மட்டுமே புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன.
'வேதியியல் பாடத்தில் விடுபட்ட, ஒரு பயிற்சி எது என்பதை புத்தகம் வந்ததும் தெரிந்து கொள்ளுங்கள்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், புத்தகம் இன்னும் வராததால், இந்த ஆண்டு செய்முறை தேர்வு உண்டா, இல்லையா என, மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

மாணவர்கள் கவலை
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறும்போது, ''புத்தகம் இல்லை என்றால், விடுபட்ட பயிற்சி வினாவை அதிகாரிகள் தெளிவுபடுத்தினால், நோட்டு புத்தகத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். பிப்ரவரியில் செய்முறை தேர்வு வரும் நிலையில், இன்னும் அதற்கான புத்தகமே வழங்காததால், மாணவர்கள் கவலையடைந்துள்ளனர்,'' என்றார்.