Breaking News

M.ED க்கு 3 வது ஊக்க ஊதியம் வழங்காததால் - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் வழக்கில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்ஆஜராக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.


ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் பாலசவுந்தரி. இவருக்கு பி.எட் மற்றும் எம்.ஏ. படிப்புகளுக்காக ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து எம்.எட். படிப்புக்காக 3 ஆவது ஊக்க ஊதிய உயர்வு கோரி விண்ணப்பித்தார். அந்த கோரிக்கையை, பரமக்குடி மாவட்டக்கல்வி அதிகாரி நிராகரித்தார். இதை எதிர்த்து பாலசவுந்தரி மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தனி நீதிபதி, பாலசவுந்தரிக்கு 3 ஆவது ஊக்க ஊதிய உயர்வை வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் 8 வாரத்துக்குள் ஊக்க ஊதிய உயர்வை வழங்க 2014 செப்.18-இல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி ஊக்க ஊதியம் வழங்கப்படவில்லை. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், மாவட்ட கல்வி அதிகாரி(பரமக்குடி) பழனியாண்டி ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை கோரி பாலசவுந்தரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.