Breaking News

பிளஸ் டூ , எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள்: முழு விடையையும் அடித்தால் ஓராண்டு தேர்வு எழுத தடை


தமிழகத்தில் பிளஸ் டூ, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களது விடைத்தாளில் எழுதிய விடைமுழுவதையும் அடித்தால் ஓராண்டுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்வு துறை அறிவித்துள்ளது.



தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் வருகிற மார்ச்  4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல எஸ்எஸ்எல்சி தேர்வுகள் மார்ச் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கல்வித் துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.தேர்வுகளின் போது மாணவர்கள் சிலர் தாங்கள் எழுதிய விடைத்தாளின் முழு விடையையும் அடித்து விடுகின்றனர். அவ்வாறு செய்யும் மாணவர்கள் அடுத்த இரு பருவங்களுக்கு (ஓராண்டு) தேர்வுகளை எழுதுவதற்கு தடை விதிக்கப்படும்.

மேலும், விடைத்தாள் வழங்கப்படும் போது மாணவர்கள் பக்கஎண்ணிக்கையை சரிபார்த்து உறுதிசெய்துகொள்ள வேண்டும். தனது முகப்புச்சீட்டில் உள்ள புகைப்படம், பெயர், பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். விடைத்தாளின் எந்தப் பகுதியிலும் தனது தேர்வு எண்ணையோ அல்லது பெயரையோ குறிப்பிடக் கூடாது.சில விடைகளை கோடிட்டு அடிக்க நேர்ந்தால், "மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது" என்ற குறிப்பை பேனாவினால் எழுத வேண்டும். ஆனால்,  கையொப்பம் இடக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.