Breaking News

67 மாணவர் விடுதிகள் திறப்பு


பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர்களுக்கான 67 விடுதிகள் திறக்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில், பிப்ரவரி 8-இல் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி மூலம் இவற்றை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார் என்று தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன், துறை செயலர் (பொறுப்பு) த.உதயசந்திரன், ஆணையர் தா.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இந்த விடுதிகளில், கிரானைட் சமையல் மேடை, குடிநீர் சுத்திகரிக்கும் கருவி, சூரிய ஒளிமூலம் நீரை சூடுபடுத்தும் கருவி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட கட்டடங்களின் விவரம்:


விழுப்புரத்தில் தரை-இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம். திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, வேலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவ-மாணவியர்களுக்கான 25 விடுதிகள்.



சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவை கவுண்டம்பாளையம், திருவாரூர் மன்னார்குடி, தேனி பெரியகுளம், நீலகிரி கூடலூர் ஆகிய இடங்களில் கல்லூரிகளுக்கான மாணவ-மாணவியர் விடுதிகள்.



விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தேனி, கரூர், தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பள்ளிக்கான 12 விடுதிகள், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்,
திருவாலூர் ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 20 விடுதிகள்.
திருவாரூர் வலங்கைமான், வேலூர் வாணியம்பாடி, கோவை, திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர், தேனி காமயகவுண்டன்பட்டி ஆகிய 5 இடங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிகள்.