Breaking News

வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை: ஏ.டி.எம். மையங்களில் அதிக பணம் நிரப்ப முடிவு


வங்கிகளுக்கு தொடர்ந்து 7 நாட்கள் விடுமுறை என்ற தகவல் பரவி வருகிறது. இதனால் வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள் கலக்கம் அடைந்தனர். மார்ச் 28–ந்தேதி சனிக்கிழமை ராம நவமி விடுமுறை, 29–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை 30–ந்தேதி திங்கட்கிழமை செயல்படும். 

31–ந்தேதி செவ்வாய்க்கிழமை நடப்பு நிதியாண்டிற்கான இறுதி நாள் என்பதால் விடுமுறை எனவும், ஏப்ரல் 1–ந்தேதி அடுத்த நிதியாண்டிற்கான முதல் நாள் என்பதால் கணக்குகளை தொடங்கும் பணிகளை மேற்கொள்வதால் அன்று விடுமுறை எனவும் தகவல் பரவியது.ஏப்ரல் 2–ந்தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி வங்கி விடுமுறை. 3–ந்தேதி புனித வெள்ளி விடுமுறை. 4–ந்தேதி வங்கி அரை நாள் மட்டும் செயல்படும். 5–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை என 7 நாட்கள் வங்கி பணிகள் முடங்கும் என்று தகவல் பரவியதையடுத்து பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து அகில இந்திய வங்கி கூட்டமைப்பு தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது:–தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்திற்கும் 3 நாட்கள் மட்டும் தொடர் விடுமுறையாகும். ஏப்ரல், 1, 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் வங்கி சேவை நடைபெறாது. ஏ.டி.எம்., இன்டர்நெட் மூலம் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஏப்ரல் 1–ந்தேதி வருடாந்திர கணக்கு முடிக்கும் பணிகள் நடைபெறும்.
நடப்பு நிதியாண்டின் கணக்குகள் முடிக்கப்பட்டு வரும் நிதியாண்டின் கணக்குகள் தொடங்குவது தொடர்பான பணிகளில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபடுவதால் அன்றுவிடுமுறையாகும்.2–ந்தேதி மகாவீர் ஜெயந்தி என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. 3–ந்தேதி புனித வெள்ளி என்பதால் விடுமுறை. தொடர்ந்து 3 நாட்கள் மட்டும் வங்கிகள் செயல்படாது. மார்ச் 31–ந்தேதி நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் வங்கிகள் செயல்படும். மார்ச் 28–ந்தேதி ராம நவமி பண்டிகைக்கு தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை இருப்பதால் ஏ.டி.எம். மையங்களில் அதிக பணம் நிரப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களிலும் பணம் முழுமையாக நிரப்பி தேவையை சமாளிக்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது