Breaking News

SSA - பயிற்சிதான் முக்கியம் பாடம் முக்கியமல்ல! - பயிற்சியால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரிய பலன் இல்லை - சமீபத்திய ஆய்வு


அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டம் என்ற, எஸ்.எஸ்.ஏ., மூலம், 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள்; அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் என்ற, ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம், 9, 10ம் வகுப்பு ஆசிரியர்கள்; மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மூலம், பிளஸ் 1, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன.


மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், செயல்முறை கற்றலை ஊக்குவிக்கவும், இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சமீப காலமாக, பயிற்சி என்ற பெயரில், கருத்தரங்கு நடத்தி, மதிய சாப்பாடு கொடுத்து, பயண செலவுக்கு, 50 ரூபாயும் கொடுத்து அனுப்பும் சடங்காக, இது நடத்தப்படுகிறது.

இந்த பயிற்சியை, கல்வி ஆண்டின், முதல் இரு மாதங்களில் முடித்து விடலாம் என்றாலும், ஆண்டு முழுவதும் நடத்தப்படுகிறது. பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி முடித்த பின் தான், எப்படி பாடம் நடத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. இந்த பயிற்சியால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரிய பலன் இல்லை என்பதை, சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

இது குறித்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

ஆசிரியர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டு, படுக்கையில் இருந்தாலும், பயிற்சிக்கு கட்டாயம் வர வேண்டும். பாடம் நடத்த வேண்டும் என கூறி, வராமல் இருந்தால், சம்பளம் பிடிக்கப்படும் என, அதிகாரிகள் மிரட்டுகின்றனர். 


சிவகங்கை மாவட்டத்தில் மட்டும், பயிற்சிக்கு வராத, 85 ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர். மொத்தத்தில், இந்த பயிற்சியால், மாணவர்களுக்கு சரியான நேரத்தில் பாடங்கள் நடத்த முடியவில்லை. இதனால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தான் பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்