Breaking News

நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வை நடத்தக்கூடாது: தலைமை நீதிபதியிடம், வக்கீல் மனு


சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி, புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் நேற்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள். அப்போது, 
மாற்றுத்திறனாளி வக்கீல் முகமது நசரூல்லா ஆஜராகி ஒரு மனுவை நீதிபதிகளிடம் கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–


தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இந்த கனமழையினால், சென்னை,காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குடிநீர், உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை மக்கள் இழந்து கடுமையாக அவதிப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் ஒரு மாதங்களுக்கு மேலாக விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் புத்தகங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. பலரது புத்தகங்கள் மழையில் நனைந்து, சிதைந்துள்ளது.எனவே, இதுபோன்ற மாணவர்கள் இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பாமல் உள்ளனர்.


இந்த சூழ்நிலையில், அரையாண்டு தேர்வை தமிழக அரசு நடத்தினால், அந்த மாணவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த கல்வியாண்டில் பள்ளிக்கூட மாணவர்களுக்குஅரையாண்டு தேர்வை நடத்தக்கூடாது என்றும் நேரடியாக இறுதியாண்டு தேர்வை நடத்தவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

பின்னர், வக்கீல் முகமது நசரூல்லா, இந்த மனுவில் அடிப்படையில் இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பொதுநல வழக்கை பதிவு செய்து, அரசுக்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என்று கூறினார்.இந்த மனுவை படித்து பார்த்த நீதிபதிகள், இந்த மனுவை வழக்காக பதிவு செய்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறினார்கள்.