Breaking News

தேர்வு பயம் வேண்டாம்! - பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா


நீண்ட விடுமுறைக்கு பின், சென்னை, திருவள்ளூர், கடலுார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளில், மாணவியருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு, புதிய சான்றிதழ் வழங்கும் முகாமும் நேற்று துவங்கியது. 


சென்னை, எழும்பூர் மாநில மகளிர் பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா கூறியதாவது: பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தகம், சீருடை, சைக்கிள், லேப் - டாப் போன்ற அனைத்தும் வழங்கப்படுகின்றன. எனவே, தேர்வை நினைத்து, மாணவர்கள்பயப்பட வேண்டாம்; தேவையான அனைத்து சலுகைகளையும் அரசுவழங்கும் பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு, கவுன்சிலிங் குழு ஆலோசனை வழங்கும். குறைந்தபட்ச தேர்ச்சிக்கான கற்றல் வழிகாட்டி நுால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


சனிக்கிழமை வகுப்புகள்
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, கூடுதல் நேரம் ஒதுக்கி, சிறப்பு வகுப்பு நடத்தப்படும். விடுமுறை நாட்களை ஈடுசெய்ய, வகுப்பு நேரத்தை, பள்ளிகள் தேவைக்கு ஏற்ப அதிகரித்து கொள்ளலாம். சனிக்கிழமை வகுப்புகள் நடத்துவது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் முடிவு செய்யலாம்.