Breaking News

ஆர்.டி.ஐ பதில்களை இணையத்தில் வெளியிட மத்திய அரசு உத்தரவு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை இணையதளத்தில் வெளியிடுமாறு மத்திய அரசுத் துறைகளுக்கு பணியாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஒரே மாதிரியான கேள்விகளைக் கேட்டு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதைத் தடுக்கும் விதத்தில் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான நடவடிக்கைகளை சில துறைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. மற்ற துறைகளும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் பதில்கள், எளிதில் புரியும்படி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு, சட்டம்-நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில், "தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு அளிக்கப்படும் கேள்விகளையும், பதில்களையும், அனைத்துத் துறைகளும் தானாக முன்வந்து வெளியிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.