Breaking News

ஊதிய உயர்வு கோரிக்கைக்கு அரசு தடை:ஊழியர்கள் அதிர்ச்சி

ஊதிய மாற்றம் செயல்படுத்தும் வரை ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை ஊழியர்கள் வைக்க வேண்டாம் என அரசு கேட்டு கொண்டுள்ளது.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2006 ஜன.,1 முதல் 7 வது ஊதிய மாற்றம் அமல்படுத்தப்பட்டது. இதில் பல முரண்பாடுகள் இருப்பதாக கூறி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அதிலும் சில முரண்பாடுகள் இருப்பதாக கூறியதை அடுத்து, 3 நபர் குழு அமைக்கப்பட்டு 89 அரசாணைகள் வெளியிடப்பட்டன.


மீண்டும் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்காக 7 வது ஊதியக்குழு அமைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து தமிழகத்திலும் 8 வது ஊதிய மாற்றம் செய்யப்பட உள்ளது. அதுவரை ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியுறுத்த வேண்டாம் என, நிதித்துறை கேட்டு கொண்டுள்ளது. அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: அரசின் அறிவிப்பு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 22 ல் மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம், ஆக., 22 ல் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்த உள்ளோம், என்றார்.