Breaking News

பள்ளி ஆசிரியரை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் கைது

பள்ளி ஆசிரியரை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் நான்குபேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி, புளியங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியராக இருப்பவர் சவுந்தரராஜன் 52. இவரது வகுப்பில் பயிலும் மாணவர்கள் சிலர் கடந்த வியாழக்கிழமை வகுப்பிற்கு வராமல் கட் அடித்தனர். 
இதனையறிந்த ஆசிரியர் மாணவர்களை அழைத்து கண்டித்துள்ளார். நேற்று காலை 9 மணியளவில் ஆசிரியர் சவுந்தரராஜன், தமது மகளை அங்குள்ள துவக்கப்பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்துள்ளார்.

பள்ளியில் விட்டுவிட்டு வெளியே வந்தபோது, அங்கு மறைந்திருந்த மாணவர்கள் ஆசிரியரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். சம்பவம் குறித்து ஆசிரியர் புளியங்குடி போலீசில் புகார் செய்தார். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து, 11ம் வகுப்பு மாணவர்கள் கார்த்திகேயன் 17, சதீஷ்குமார் 18, ராமச்சந்திரன் 17, மணிகண்டன் 17 ஆகியோரை கைது செய்து நெல்லையில் உள்ள சிறுவர்களுக்கான காப்பகத்தில் அடைத்தனர்.