Breaking News

வேடசந்தூர் அருகே மாணவர்களே இல்லாமல் பள்ளிக்கூடம்

வேடசந்தூர் அருகே மாணவர்களே இல்லாமல் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர், சத்துணவு ஊழியர்கள் பணிக்கு வந்து செல்லும் அவல நிலை நீடிக்கிறது.
மாணவர்களே இல்லாத பள்ளி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியத்தில் 70 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளும், 19 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளும், 13 உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளும், 2 உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. அரசு பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.
வேடசந்தூர் அருகே உள்ள கெட்டியபட்டி கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு காமராஜர் ஆட்சி காலத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் கடந்த சில வருடங்களாக 10-க்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்று வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு இப்பள்ளியில் ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில் ஒரு தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையலர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். மாணவர்களே இல்லாத இப்பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், சத்துணவு ஊழியர்களுக்கு அரசு பல ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பள்ளி மூடும் நிலை
இந்த கிராமத்தில் உள்ள சில மாணவர்கள் தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். இவையில்லாமல் சுற்றுப்புற கிராமத்தில் பள்ளி செல்ல இருக்கும் குழந்தைகள் மற்றும் தனியார் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் ஆகியோரை கணக்கெடுத்து இப்பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இப்பள்ளியை மூடுவதற்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இப்பள்ளியை மூடினால் எதிர்காலத்தில் ஏழை, எளிய மாணவர்கள் ஆரம்ப கல்வி கற்பதற்கு பல கிலோ மீட்டர் தூரம் செல்லும் அவல நிலை ஏற்படும்.

மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை
எனவே இந்த பள்ளியை மூடுவதை கைவிட்டு, தொடர்ந்து செயல்படுவதற்கு ஏற்ற வகையில் மாணவர்களை சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வேடசந்தூர் ஒன்றியத்தில் சில அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களின் சொந்த செலவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், ஆண்டு விழா மற்றும் நடனம், யோகா உள்ளிட்ட பவ்வேறு போட்டிகள் நடத்தி வருகின்றனர்.
போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பதால் வேடசந்தூர் ஒன்றியத்தில் குறிப்பிட்ட அரசு பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.