Breaking News

முன் பணம் கிடைக்குமா?ஆசிரியர்கள் ஏக்கம்


தீபாவளி பண்டிகைக்கான முன் பணம் அறிவிக்கப்படாததால், ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர். அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தீபாவளிக்கு போனஸ் கிடையாது. மாறாக, தீபாவளி பண்டிகையை கொண்டாட, வட்டியில்லா கடன் வழங்கப்படும். 

பண்டிகை முன் பணம் என்றழைக்கப்படும் இந்த தொகையின் மூலம் ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு, புதிய ஆடைகள் எடுத்து, பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

இந்த தொகையானது, மாதந்தோறும், 500 ரூபாயாக, சம்பளத்தில் பிடிக்கப்படும். பெரும்பாலான ஆசிரியர்கள், வீட்டுக்கடன் பெற்றுள்ளதால், சம்பளத்தில் பெரும்பகுதி கடனுக்கு சென்று விடுகிறது. எனவே, பலர் இந்த பண்டிகை முன் பணத்தையே நம்பி உள்ளனர். இந்த ஆண்டு, பண்டிகை முன்பணம் குறித்து அரசு தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. ஆசிரியர்கள், பண்டிகை முன்பணம் கேட்டு, தலைமை ஆசிரியர்களிடம் விண்ணப்பித்தால், அரசு அறிவிப்பு வரவில்லை என, விண்ணப்பத்தை வாங்க மறுக்கின்றனர்.