Breaking News

சென்டம்' தேர்ச்சி அளித்த ஆசிரியர்களை கவுரவிக்க வெள்ளி நாணயம்


கடந்த மார்ச் மாதம் நடந்த, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், ஒவ்வொரு பாடத்திலும் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த அரசுப் பள்ளி ஆசிரியர்களை கவுரவிக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, 2004ம் ஆண்டு முதல் பல்வேறு ஊக்கப்பரிசு திட்டங்களை பள்ளி கல்வித் துறை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது. 

அதன்படி, நுாறு சதவீத தேர்ச்சி இலக்கினை எட்டிய நகர்ப்புற அரசு பள்ளிகளுக்கும், 90 சதவீதம் தேர்ச்சி அளித்த கிராமப்புற பள்ளிகளுக்கும், ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப் படுகிறது.அத்துடன், ஒவ்வொரு பாடத்திலும் 100 சதவீத தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கேடயம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இத்திட்டம், 2011ம் ஆண்டு முதல் கிடப்பில் போடப்பட்டது.தங்கள் பாடத்தில் நுாறு சதவீதம் தேர்ச்சி அளித்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்படவில்லை. ஆசிரியர்கள் மத்தியில் இது பெரும் குறையாக இருந்து வந்தது.பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் குமார் மேற்கொண்ட முயற்சி காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி அளித்த 3,935 ஆசிரியர்கள், சில மாதங்களுக்கு முன் கவுரவிக்கப் பட்டனர்.

ஆனால், கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்வில் தங்கள் பாடத்தில் 'சென்டம்' தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்படாமல் இருந்தனர்.தற்போது, கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடவாரியாக சென்டம் தேர்ச்சி கொடுத்த, அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 775 ஆசிரியர்களை கவுரப்படுத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.கடந்த காலங்களில் ஆசிரியர்களை கவுரப்படுத்தும் விதமாக, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு நினைவுப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. 

இது, ஆசிரியர் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.அதையடுத்து, தற்போது கவுரவிக்கப்படும் ஆசிரியர்களுக்கு பரிசாக, 92 சதவீத துாய்மை கொண்ட வெள்ளி நாணயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த வெள்ளி நாணயங்களை தயாரித்து வழங்க, பள்ளிக் கல்வித் துறை நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் கோரி உள்ளது. நவம்பர் 3ம் தேதி, டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது.