Breaking News

பேஸ்புக், டுவிட்டர்' தளங்களில் ரேஷன் புகார் செய்யலாம்


சமூக வலைதளங்களில், ரேஷன் தொடர்பான புகார் தெரிவிக்கும் வசதி துவக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளில், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்க, தமிழக அரசு, ஆண்டுக்கு, 5,500 கோடி ரூபாய் செலவு செய்கிறது. 

கார்டு வைத்திருக்கும் பலர், ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்குவதில்லை; அவற்றை, ஊழியர்கள் வெளியில் விற்கின்றனர். ரேஷன் பொருட்கள், தரமற்று இருப்பதாகவும் புகார்கள் எழுகின்றன. இந்நிலையில், 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களில், ரேஷன் புகார் தெரிவிக்கும் வசதியை, உணவுத் துறை துவக்கிஉள்ளது.


இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்க, தொலைபேசி எண்கள் உள்ளன; ஆனாலும், யாரும் முன்வருவதில்லை; முறைகேட்டை தடுக்க முடியவில்லை. தற்போது, சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம். எனவே, ரேஷன் தொடர்பான புகார்களை, டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற முகவரியில் தெரிவிக்கலாம். 

அதில், ரேஷன் வினியோகத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களையும் கூறலாம். ரேஷன் பொருட்கள் தரமற்று இருந்தால், புகைப்படம் எடுத்து வெளியிடலாம். இதன் மூலம், ஒரு இடத்தில் நடக்கும் தவறு, மற்ற இடங்களுக்கு தெரிய வரும் என்பதால், முறைகேடுகள் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.