Breaking News

தமிழுக்கு இடமில்லை: புதிதாக எந்த மொழியையும் இந்திய ஆட்சி மொழியாக்க முடியாது- மத்திய அரசு அறிவிப்பு

மத்திய ஆட்சி மொழியாக தமிழ் உள்ளிட்ட எந்த புதிய மொழியையும் சேர்த்துக் கொள்ள முடியாது என மத்திய அரசு இன்று திட்டவட்டமாக அறிவித்து விட்டது.


இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற மேல்சபையில் இன்று காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன் தனிநபர் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுத்துவிட்ட மத்திய உள்துறை துணை மந்திரி ஹரிபாய் பராத்திபாய் சவுத்ரி, ‘இந்த முடிவை ஏற்றுக் கொள்வதானால் அரசியலமைப்பு சட்டத்தின் 346-வது பிரிவில் திருத்த வேண்டிவரும். இதே கோரிக்கையை முன்வைத்து, தங்கள் பிராந்தியத்தின் மொழியையும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என மற்ற மாநிலங்களும் அழுத்தம் தர நேரிடும்.

அவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு பல மொழிகளை ஆட்சி மொழியாக்கினால், இம்மொழிகளுக்கான தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் உள்பட பல விஷயங்களை நாம் இணைக்க வேண்டியதாகி விடும் என்று தெரிவித்தார்.

இதே போல், சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற மற்றொரு கோரிக்கைக்கு பதிலளித்த மந்திரி, ‘இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் முழு பெஞ்ச் பரிசீலித்து வருகின்றது’ என்று தெரிவித்தார்.

திருவள்ளுவரின் பிறந்தநாளை தேசிய மொழி தினமாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதில் அளித்த அவர், ‘தங்களது பகுதியை சேர்ந்த புலவர்களுக்கும் இதே போன்ற கொண்டாட்டங்களை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதர மாநிலங்களும் முன் வைக்கலாம் என்பதால் இதை ஏற்றுக் கொள்வதற்கில்லை’ என்று கூறினார்