Breaking News

5 வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியர்: ரோட்டில் திரியும் மாணவர்கள்


வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே ரெங்கபாளையம் துவக்கப்பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் ஒரு ஆசிரியரே உள்ளதால், மாணவர்கள் வகுப்பில் அமராமல் தெருக்களில் திரிகின்றனர்.
இப்பள்ளியில் தலைமை மற்றும் உதவி ஆசிரியை என 2 பேர் பணிபுரிந்தனர். உதவி ஆசிரியை கடந்த ஜூனில் இடமாறுதலில் சென்றார். அதன் பின் 5 மாதங்களுக்கு மேலாகியும் ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. தலைமை ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார். ஒரு வகுப்பில் பாடம் நடத்தினால் மற்ற வகுப்பு மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியேறிவிடுகின்றனர். கட்டுப்பாடின்றி கடைத் தெருக்களில் அலைந்து திரிகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிப்பதுடன் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. 


கிராமத்தினர் கூறியதாவது:


ரோட்டில் திரியும் மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் யார் பொறுப்பு? ஓராசிரியர் பள்ளிகளே கூடாது என கல்வித்துறை விதி கூறுகிறது. இரு ஆசிரியரில் ஒருவரை மாறுதல் செய்து ஐந்து மாதங்களுக்கு மேலாகிவிட்டது. புதிய ஆசிரியர் நியமிக்காதது, கல்வித்துறையின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது. இதற்கு முடிவு காணாவிட்டால் போராடும் நிலை உருவாகும்,' என்றனர்.

உதவி தொடக்க கல்வி அலுவலர் பரமேஸ்வரி கூறயதாவது: பொது காலந்தாய்வில் ஒருஆசிரியர் அப்பள்ளிக்கு வருவதாக இருந்ததால் அங்கு பணியாற்றிய உதவி ஆசிரியர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அங்கு வருவதாக இருந்த ஆசிரியர் வேறு மாவட்டத்திற்கு சென்றுவிட்டார். தற்போது ஒரு ஆசிரியரை தற்காலிகமாக நியமித்துள்ளோம். பள்ளி திறந்ததும் அவர் பணிக்குச் செல்வார், என்றார்.