Breaking News

மாணவர்களே இல்லாத அரசு பள்ளி: தலைமை ஆசிரியை மட்டும் ஆஜர்


வேடசந்துார்,:வேடசந்துார் அருகே, இரண்டு ஆண்டுகளாக மாணவர்களே இல்லாத அரசு பள்ளிக்கு, தலைமை ஆசிரியை மட்டும் தினமும் வந்து செல்கிறார்.


திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் ஒன்றியம், சித்துார் ஊராட்சியைச் சேர்ந்தது கெட்டியபட்டி. 50க்கும் குறைவான வீடுகளே உள்ளன. இங்கு, 1961 முதல், அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில், 80 மாணவர்கள் இருந்தனர். சில ஆண்டுகளாக மாணவர் வருகை குறைந்து, இரண்டு ஆண்டுகளாக ஒரு மாணவர் கூட இல்லாமல் பள்ளி காற்றாடுகிறது. சுற்றுப்பகுதியில் மூன்று அரசு, ஒரு தனியார் பள்ளி துவங்கப்பட்டதே இந்நிலைக்கு காரணம்.


இப்பள்ளி தலைமை ஆசிரியை சுசீலா மட்டும், இரண்டு ஆண்டுகளாக தினமும் பள்ளிக்கு வந்து செல்கிறார். மாணவர்கள் வராததால், சத்துணவு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர்.
தலைமை ஆசிரியையை வேறு பள்ளிக்கு மாற்றவோ, இப்பள்ளிக்கு புதிய மாணவர்களை சேர்க்கவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஒரு ஆசிரியையின் உழைப்பு வீணாவதுடன், அரசு நிதியும் வீணடிக்கப்படுகிறது.


உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜான்சன் கூறுகையில், ''பள்ளியில் மாணவர்கள் இல்லை என்பது உண்மை தான். இப்பள்ளியை மூடுவது குறித்து மாவட்ட நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.