Breaking News

வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கை'யில்...இனி 6-ம் வகுப்பில் இருந்துஆங்கிலக் கல்விதான்!'

மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கை குறித்து, பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டுள்ளது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். 'வருகிற 31-ம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறது மத்திய அரசு. இதுகுறித்து மாநில அரசு மௌனமாக இருப்பது வேதனையளிக்கிறது' என்கின்றனர் கல்வியாளர்கள். 

தேசிய அளவில் புதிய கல்விக் கொள்கையை வகுக்கத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. இதன்படி,   பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்குப் பிறகும், கல்லூரி படிப்புகளில் சேர மாணவர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்; ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலக் கல்வி, ஐந்தாம் வகுப்பு வரையில் மட்டுமே ஆல் பாஸ் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளனர். இதுகுறித்து மத்திய அரசு,  இணையதளத்தில் மட்டுமே கருத்துக் கேட்புகளை நடத்திக் கொண்டிருக்கிறது." இந்திய மொழிகளில் இதுபற்றிய அறிவிப்புகளை வெளியிடாமல், ஆங்கிலத்தில் கருத்துக் கேட்பு குறித்து விவரித்துள்ளனர்.

தேசிய கல்விக் கொள்கையை வரையறுப்பதில்கூட, அந்நிய மொழியில் கருத்துக் கேட்பு நடத்துவது கண்டனத்திற்குரியது. தேசிய கல்விக் கொள்கை குறித்து, மாநில அரசிடம் என்ன மாதிரியான கடிதப் போக்குவரத்தை மத்திய அரசு நடத்தியது என்பது குறித்துஎந்த விவரங்களும் தெரியப்படுத்தப்படவில்லை" என ஆதங்கப்படுகிறார் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

மேலும் அவர், " இப்படியொரு கருத்துக் கேட்பு நடப்பதே, பலருக்கும் தெரியவில்லை. இவை அமல்படுத்தப்பட்டால், மாநில அரசின் சுயாட்சி அதிகாரம் என்பது முற்றிலும் பறிபோய்விடும்.மாநிலத்திற்கென்று உள்ள மொழி, கல்வி, கொள்கை முடிவெடுக்கும் திறன் போன்றவை முற்றிலும் அடிபட்டுப் போய்விடும். அதற்கான முன்முடிவுகள் அனைத்தும் சுப்ரமணியன் கமிட்டி பரித்துரைத்ததேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கின்றன. 

எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பது அவரவர் உரிமை. தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஆங்கில மொழியை பிரதானப்படுத்தியே கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது. சுமார் 230 பக்கங்களில் அவர்கள் தெரிவித்துள்ள பரிந்துரைகள் அனைத்தும், நமது கல்வி முறைக்கு எதிராகவே உள்ளது. இவற்றை மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டால், வரும் காலங்களில் கல்வி குறித்த முடிவுகளை மத்திய அரசே எடுக்கும். மாநில அரசுகள் வைக்கும் பொதுத் தேர்வுகளுக்கு எந்தவித மதிப்பும் இருக்காது. அறிக்கையை தயார் செய்வதற்கு முன்னதாக பெற்றோர், ஆசிரியர், மாணவர்களிடம் கருத்துக் கேட்பு நடத்தியதாகச் சொல்கிறார்கள். அவர்கள் யாரையும் சந்தித்துப் பேசவில்லை என்பதுதான் உண்மை. 

இப்படியொரு திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக, தமிழக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரிடமும், குழுவின் பரிந்துரைகளை விரிவாக எடுத்துக் கூறி, அவர்களின் கருத்துக்களைக் கேட்க முன்வர வேண்டும்.இதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கும் மாநில முதலமைச்சருக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறோம். தேசிய கல்விக் குழுவின் அபாயங்கள் குறித்து வருகிற 14-ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் நாம் முன்னெச்சரிக்கையாக இல்லாவிட்டால், கல்வியில் இன்னும் பல பத்தாண்டுகள் பின்னோக்கிய நிலைக்குத்தான் தள்ளப்படுவோம். இதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்றார் கவலையோடு. 

'இணையதளத்தில் பெயரளவுக்குக் கருத்துக் கேட்பு வைபவத்தை நடத்திவிட்டு, ஏதோ ஒரு நாளில் நாடாளுமன்றத்தில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுவிடக் கூடாது' என அச்சப்படுகின்றனர் கல்வியாளர்கள்.