Breaking News

பள்ளி, கல்லூரிகளில் யோகா தினம் உண்டா?

தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும், வரும், 21ம் தேதி, சர்வதேச யோகா தினம் கொண்டாடுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், வரும், 22ம் தேதி தான் திறக்கப்படுகின்றன. எனவே, இந்த பள்ளி நிர்வாகிகளும் விழி பிதுங்கியுள்ளனர்.சர்வதேச யோகா தினம் குறித்து, தமிழக அரசிடம் இருந்து பள்ளிக்கல்வித் துறைக்கு, இதுவரை அதிகாரபூர்வ வழிகாட்டுதல் வரவில்லை.

யோகா தொடர்பான பொது நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவியரை ஈடுபடுத்த விரும்பினால், மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி முடிவெடுத்துக் கொள்ளலாம் என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கல்லுாரிகளுக்கு மாநில உயர்கல்வி மன்றமோ, கல்லுாரிக் கல்வி இயக்ககமோ எந்த வழிகாட்டுதலும் இதுவரை வழங்கவில்லை. இதனால், சர்வதேச யோகா தின கொண்டாட்டத்துக்கான, எந்த ஏற்பாடும் மேற்கொள்ளவில்லை.

கே.வி., பள்ளிகள்:

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, மத்திய இடைநிலைக்கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது.பெரும்பாலான சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மத்திய அரசின் கேந்திர வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகள், வரும், 22ம் தேதி தான் திறக்கின்றன. அதனால், 21ம் தேதி யோகா தினம் கொண்டாட வாய்ப்பே இல்லை என்று, கே.வி., பள்ளி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.கட்டாயம் கொண்டாட வேண்டுமென்றால், ஏதாவது சில மாணவர்களை வைத்து, பெயரளவில் தான் கொண்டாட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.