Breaking News

பள்ளிக்கு வராததை கண்டித்ததால் தற்கொலை மிரட்டல் விடுத்த H.M சஸ்பெண்ட்

பள்ளிக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்ததால் தற்கொலை மிரட்டல் விடுத்த தலைமை ஆசிரியையை ஆதிதிராவிட இணை இயக்குனர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் துத்திகாடு ஊராட்சியை சேர்ந்த தெள்ளை மலை கிராமத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நடுநிலைப்பள்ளியில் கடந்த மாதம் 28ம் தேதி அணைக்கட்டு எம்எல்ஏ கலையரசு ஆய்வு செய்தார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியை வேண்டாபாய், கடந்த டிசம்பர் மாதம் முதலே பணிக்கு வருவது இல்லை என்று தெரியவந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியையிடம் எம்எல்ஏ மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரை கண்டித்தனர். இதற்கு அந்த தலைமை ஆசிரியை, ்நான் வெகு தொலைவில் இருந்து வருகிறேன். ஏதாவது கேட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.

பின்னர் எம்எல்ஏ மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் அந்த தலைமை ஆசிரியரை இனி இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடாது என்று எச்சரித்தனர். இதுகுறித்து ஆதிதிராவிட இணை இயக்குனர் விளக்கம் கேட்டிருந்தார். இதற்கு அதிகாரிகளும் பதில் அளித்தனர். இந்நிலையில் தெள்ளை ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேண்டாபாயை ஆதிதிராவிட இணை இயக்குனர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவு தலைமை ஆசிரியர் வேண்டாபாய்க்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று வேலூர் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் நீலவேணி தெரிவித்தார்.